அன்னபூர்ணா ஹோட்டல் நிறுவனர் மன்னிப்பு கேட்ட விவகாரத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக தமிழக காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.
கோவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அன்னபூர்ணா உணவகங்களின் நிறுவனர் சீனிவாசன், ‘இனிப்புக்கு குறைவான ஜிஎஸ்டியும், காரத்துக்கு அதிகமான ஜிஎஸ்டியும் விதிக்கப்பட்டுள்ளது. இதனால், பில் போடுவதில் சிரமம் உண்டாகிறது. பன்னுக்கு ஜிஎஸ்டி இல்லை, ஆனால், அதில் வைக்கும் க்ரீமுக்கு ஜிஎஸ்டி போடப்படுகிறது’ என்று பேசினார். இதைத் தொடர்ந்து, நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன் மன்னிப்பு கேட்டுள்ளார்.
இது குறித்து செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் பக்கத்தில், ‘நாளை(14.09.2024) சனிக்கிழமை அன்று மாலை 3.00 மணியளவில் கோயம்புத்தூர் காந்தி பூங்கா, ஆர்.எஸ்.புரம், அன்னபூர்ணா ஓட்டல் எதிரில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை பாதுகாக்க வேண்டியும், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும் கோயம்புத்தூர் வடக்கு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.வி.எம்.சி.மனோகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றுகிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.
Leave a Reply