தன் தோல்விகளை மறைப்பதற்கு தொகுதி மறுசீரமைப்பு பிரச்சனையை ஸ்டாலின் எழுப்பியுள்ளார் – எல்.முருகன்

Spread the love

ஈரோடு மற்றும் மதுரை ஆகிய பகுதிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக மத்திய இணை அமைச்சர் எல். முருகன் இன்று கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அவரை வரவேற்கும் நிகழ்ச்சியில் பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த எல். முருகன், தமிழக அரசை கடுமையாக விமர்சித்தார். “தலைமை அமைச்சர் ஸ்டாலின், தம்முடைய ஆட்சியில் ஏற்பட்ட தோல்விகளை மறைப்பதற்காக பாராளுமன்றத் தொகுதிகள் மறுசீரமைப்பு விவகாரத்தை எழுப்புகிறார்,” என அவர் குற்றம்சாட்டினார்.

“மின்சார கட்டண உயர்வு, டாஸ்மாக் ஊழல் உள்ளிட்ட பல ஊழல்கள் தற்போது திமுக ஆட்சியில் நடைபெறுகின்றன. முதல்வரா அரசை நடத்துகிறார், இல்லையா என்பதில் சந்தேகம் இருக்கின்றது. இவரது தம்பிகள் ஆட்சியை வழிநடத்துகிறார்கள் போல இருக்கிறது,” என்றும் அவர் கூறினார்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து அவர் பேசிய போது, “பீகார், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் ஏற்கனவே ஜாதிவாரி கணக்கெடுப்பு நடைபெற்றுள்ளது. இதைப் பற்றிய மனுவை ஸ்டாலின் தாக்கல் செய்யவில்லை. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சமூக நீதிக்கான உண்மையான போராளியாக இருந்து, இந்தியா முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவித்துள்ளனர்,” என்றார்.

“மறுசீரமைப்புக்கு தொடர்புடைய விவகாரங்கள் குறித்து பாராளுமன்ற விவகாரங்கள் துறை எதையும் தெரிவித்ததில்லை. பிரதமர் மோடி அவர்கள் எந்த மாநிலத்திற்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், சமமான முறையில் தொகுதிகள் மறுசீரமைக்கப்படும் என தெளிவாக கூறியுள்ளனர். உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களும் இதுபோன்ற கருத்தை தெரிவித்துள்ளார்கள்,” என கூறினார்.

திமுக அரசு முருக பக்தர்களுக்கு எதிராக செயல்படுவதாகவும், அதனை எதிர்க்கும் வகையில் முருக பக்தர்களும் பொதுமக்களும் தன்னெழுச்சியாக இந்த மாநாட்டை நடத்தி வருவதாகவும் எல். முருகன் தெரிவித்தார்.

மேலும், “தமிழ் கலாச்சாரத்தை மதிக்கும் விதமாக மத்திய அரசு ஆண்டு தோறும் காசி தமிழ் சங்கம் மற்றும் சௌராஷ்டிரா தமிழ் சங்கம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. தமிழ் கடவுளான முருகனைப் பற்றிய மாநாட்டை தமிழ்நாட்டிலேயே நடத்துவது என்பது மிகச் சரியான ஒன்று” என்றும் அவர் வலியுறுத்தினார்.