கோவை மாவட்டம் பேரூரைச் சேர்ந்த இளைஞர் சசி, தனது சொகுசு இருசக்கர வாகனத்தில் சன் ரூஃபை பொருத்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். டெலிவரி சேவையில் பணியாற்றும் சசி, வெயிலும் மழையும் கொண்ட காலநிலையிலேயே பெரும்பாலும் சாலைகளில் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்த சவாலான சூழ்நிலையை எதிர்கொள்வதற்காகவும், தன்னை மற்றும் பயணிகளை பாதுகாப்பதற்காகவும், தனது இருசக்கர வாகனத்தில் சன் ரூஃபை புதுமையாக பொருத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும் போது, “நான் தினமும் வெயிலிலும் மழையிலும் வேலை செய்ய வேண்டியதால்தான் இந்த எண்ணம் வந்தது. குறிப்பாக கோடை வெயிலில் வாகனத்தில் பயணிக்கும்போது எனக்கும், எனது வாகனத்தில் பயணிக்கும் குழந்தைகளுக்கும் கடும் சிரமம் ஏற்பட்டது. இதனால், ஆன்லைனில் சன் ரூஃபை ஆர்டர் செய்து வாங்கி, அதை என் வாகனத்தில் பொருத்திக்கொண்டேன்,” என்றார்.
சசி மேலும் கூறும் போது, இந்த சன் ரூஃபின் மூலம் வெயிலின் தாக்கத்திலிருந்து தனது வாகனத்தையும், பயணிகளையும் பாதுகாத்து வருகிறார் என்றும், சிறுவர் மற்றும் பெரியவர்களின் சரும நலனை பாதுகாப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் தெரிவித்தார். மேலும், மழைக் காலத்திலும் வழக்கம்போல் வேலை செய்ய முடியும் வகையில் இந்த சன் ரூஃபும் உதவிகரமாக இருப்பதாக கூறினார்.
நிழலுக்கு நகராட்சி அமைத்துள்ள பந்தல்கள் சில இடங்களில் மட்டுமே இருக்கின்றன. ஆனால் தனது வாகனத்தில் இருந்தே சன் ரூஃஃபின் நிழலை பெற்றுக் கொள்ள முடிவதால், எங்கும் செல்லும் போது வெயிலில் இருந்து தன்னை பாதுகாத்துக்கொள்கிறேன் என்று சசி கூறுகிறார்.
தனது வாகனத்தில் சன் ரூஃபை பொருத்தி, அதனை ஓட்டிச் செல்லும் சசியைப் பார்த்து கோவை மக்கள் ஆச்சரியத்துடன் பாராட்டுகிறார்கள். அவருடைய இந்த புதுமையான முயற்சி பலருக்கும் ஒரு உத்வேகமாக உள்ளது.
Leave a Reply