சூலூர் அருகே ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.37 லட்சம் தங்க நகைகள் பறிமுதல்

Spread the love
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்களுக்கு எதிராக தீவிர சோதனைகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், கோவை சூலூர் அருகே சிந்தாமணிபுதூர் டோல்கேட் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு தனியார் ஆம்னி பேருந்தை நிறுத்தி சோதனை செய்தனர்.

பேருந்தில் பயணம் செய்த மது சுதன் ராணா என்பவரின் உடைமைகளைச் சோதனையிட்டபோது, அவர் அதிகாரிகளுக்கு முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரது பொருட்களை தீவிரமாக சோதனை செய்ததில், 255 கிராம் தங்க நகைகள் இருப்பது கண்டறியப்பட்டது.

இந்த நகைகளின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் ரூ.37 லட்சத்து 30 ஆயிரம் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அவற்றிற்கான உரிய ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லாததால், அதிகாரிகள் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் அனைத்தும் பாதுகாப்பாக சூலூர் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்தால் நகைகளைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.