கோவை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மைப் பணிக்கான வாகன ஓட்டுநர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால், நகரின் பல்வேறு பகுதிகளில் குப்பை தேங்கி கிடக்கும் நிலை உருவாகியுள்ளது.
மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் செயல்பட்டு வரும் சுமார் 4,000க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் வருங்கால வைப்புத் தொகையை நிர்வாகம் முறையாக செலுத்தாதது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக உக்கடம் புல்லுக்காடு பகுதியில் மட்டும் 150க்கும் மேற்பட்ட வாகனங்கள் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டன.
போராட்டத்தில் ஈடுபட்ட ஓட்டுநர்கள், “பல மாதங்களாக எங்களது வைப்புத் தொகை செலுத்தப்படவில்லை. இது குறித்து அதிகாரிகளை பலமுறை தொடர்புகொண்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மாநகராட்சியின் இந்த மோசடியை கண்டிக்கிறோம். உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்,” எனக் கூறினர்.
இந்த திடீர் போராட்டத்தால் நகரின் பல பகுதிகளில் தூய்மைப் பணிகள் நிறுத்தப்பட்டதால், பொதுமக்கள் சுகாதார சிக்கல்களில் சிக்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, குப்பை அகற்றும் பணியை மீண்டும் தொடங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்கள் எதிர்பார்ப்பு ஆகும்.
Leave a Reply