மகான் ஸ்ரீ படே சாஹிப் சுவாமிகள் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர் என்றாலும், இறை நிலையின் அற்புதமான பேராற்றலை உணர்ந்த பின் எல்லா அடையாளங்களையும் துறந்தார். ஜாதி, மதம், இனம் – இவற்றுக்கு அப்பாற்பட்டு விளங்கினார். மக்கள் இவரை “ஸ்ரீ படே சாஹிப்” என்று அழைத்தனர். இவர் மகிழ மரத்தின் அடியில் அமர்ந்து வைத்தியம் செய்வார். மக்கள் குறைகளை கேட்டு தீராத நோய்களை தீர்த்து வைக்கும் வல்லமை கொண்டவர். பச்சிலைகளை அரைத்துக் கொடுத்தும், சிரசில் கைவைத்தும் அவர்களது நோய்களை குணப்படுத்துவார். விபூதியை பிரசாதமாக கொடுப்பார்.
நடுத்தர உயரம். தலையில் சிவப்பு நிறத்தில் ஒரு குல்லாய். இடுப்பில் ஒரு அரையாடை, அருள் பொங்கும் முகம், கருணை ததும்பும் விழிகள், சதா ஏதேனும் மந்திரங்களை முணுமுணுத்துக் கொண்டிருக்கும் வாய் என அவரது தோற்றம் மக்களுக்கு வியப்பைத் தந்தது. மகானோ, மகா மௌனியாய் விளங்கிய இவர் எவரிடமும் எதுவும் பேச மாட்டார். பாண்டிச்சேரியை அடுத்த திருக்கனூரிலிருந்து கண்டமங்கலம் அருகே உள்ள சின்னபாபு சமுத்திரதிற்கு இடையிடையே சென்று வருவார். பிறகு சின்னபாபு சமுத்திரத்திலேயே தங்கி, அவரை நாடி வருபவர்களுக்கு, தீர்க்க முடியாது என்று கைவிடப்பட்ட பல நோய்களையும் விபூதி கொடுத்தே குணப்படுத்தியுள்ளார்.
மகான் அவர்கள் ஒரு தும்புரு வீணையுடன் மகிழ மரத்தின் அடியில் அமர்ந்து தன்னைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு ஆசி வழங்குவார். வியாதியின் அவஸ்தையுடன் தன்னிடம் வருபவர்களுக்கு விபூதி பிரசாதம் கொடுத்து, ஆசிர்வதித்து அனுப்புவார். அவர் தன் அருகில் பச்சிலைகள் போடப்பட்ட நீரினை ஒரு மண் கலயத்தில் வைத்திருப்பார், அருகில் சிறு பானை மற்றும் கொட்டாங்கச்சிகளும் இருக்கும். சிலருக்கு மகான் தன் கையால் ஒரு சிறு கொட்டாங்கச்சியில் நீரை அளிப்பார். அதை அருந்தியதுமே அவர்களுக்கு இருந்த நோய்கள் விலகி விடும். சிலரை அருகே உள்ள மகிழ மரத்தைச் சுற்றி வரும் படி ஜாடையால் சொல்வார், அதன் படி சுற்றும் மக்கள் அனைவரும் நோய் நீங்கப் பெற்று, மகிழ்ச்சி அடைவார்கள். மகான் படே சாஹிப்பிடம் வந்தாலே, வியாதிகள் குணமாகிறது என்ற பேச்சு எங்கெங்கும் பரவி, அவர் வாழ்ந்த காலத்தில் தினமும் ஏராளமானோர் அவரை வந்து தரிசித்து அருள் பெற்றுச் சென்றனர்.
மகான் குழந்தைகளிடம் அதிக பிரியமாக நடந்துகொள்வார். சில நேரங்களில் சிறு குழந்தைகள் கையில் ஒரு பிடி மண்ணை அள்ளிக் கொடுத்துக் கையை மூடச் சொல்வார். பின் குழந்தைகளும் அவ்வாறே செய்து விட்டு கையை திறந்து பார்க்க பல வண்ணங்களில் மிட்டாய்கள் இருக்கும். குழந்தைகளும் மிட்டாய்களை குதூகலமாக எடுத்துச் செல்வார்கள்.
நிறைய அற்புதங்களை நிகழ்த்தி மக்களுக்குப் பல்வேறு நன்மைகளைப் புரிந்த மகான் இறைவனோடு கலப்பதற்காக தன்னை தயார்படுத்திக் கொண்டார். 1868ம் ஆண்டு, பிப்ரவரி 12ம் தேதி செவ்வாய்க்கிழமை, ஆயில்ய நட்சத்திரம் கூடிய தினத்தன்று மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த சில குழந்தைகளை அழைத்து, அருகிலிருந்த மணற்குவியலைக் கொண்டு தம்மை மூடுமாறு சொல்லி விட்டு, அருகில் உள்ள பள்ளத்தில் போய் அமர்ந்து கொண்டார். எப்போதும் போல் தம் மீது மணலைப் போட்டு மூடச் சொன்னதால் ஏதாவது விளையாட்டு காண்பிக்கப் போகிறார் என நினைத்தவாறே மணலைக் கொட்டிக் குழியை மூடினர். அப்போது அந்தக் குழியிலிருந்து மகானின் கை மட்டும் வெளியே வந்தது, அதில் நிறைய மிட்டாய்கள் இருந்தன. அவற்றை எடுத்துக்கொண்ட குழந்தைகள் ஊருக்குள் போய் பெரியவர்களிடம் நடந்ததைக் கூறினர். அவர்கள் வந்து பார்த்த போது மகான் ஜீவசமாதி ஆகி விட்டதை உணர்ந்தனர். மகானின் புகழ்பெற்ற இச்சமாதி ஆலயம் விழுப்புரம் – பாண்டிச்சேரி சாலையில் சின்னபாபு சமுத்திரம் என்ற ஊரில் அமைந்துள்ளது.
Leave a Reply