இந்தியா இன்று அதிகாலை பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது வெற்றிகரமாக நடத்திய ‛ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலில், இந்திய ராணுவம் மற்றும் விமானப்படை இணைந்து துல்லியமான நடவடிக்கைகளை மேற்கொண்டன. இதில், இந்திய பெண் வீராங்கனைகளும் முக்கிய பங்கு வகித்திருப்பது பெருமையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில், பாதுகாப்பு அமைச்சகம் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் இரண்டு முக்கிய பெண் அதிகாரிகள் — ராணுவ கர்னல் சோபியா குரேஷி மற்றும் விமானப்படை விங் கமாண்டர் வியோமிகா சிங் — தாக்குதல் நடவடிக்கைகள் குறித்து விரிவாக விளக்கமளித்தனர்.
கர்னல் சோபியா குரேஷி, இந்திய ராணுவ சிக்னல்ஸ் பிரிவைச் சேர்ந்தவர். 2016ஆம் ஆண்டில் பன்னாட்டு இராணுவப் பயிற்சியில் இந்திய ராணுவத்திற்கு தலைமை தாங்கிய முதல் பெண் அதிகாரி என்ற சாதனையாளர். 18 நாடுகள் பங்கேற்ற அந்த பயிற்சியில், அவர் ஒரே பெண் தளபதியாக இருந்தார். குஜராத்தைச் சேர்ந்த குரேஷி, 2006ஆம் ஆண்டு காங்கோவில் ஐ.நா அமைதி காக்கும் பணியிலும் ஈடுபட்டிருந்தார்.
வியோமிகா சிங், 2019 ஆம் ஆண்டு ஹெலிகாப்டர் விமானியாக இந்திய விமானப்படையில் சேர்ந்தவர். 2,500 மணிநேரங்களுக்கு மேலான பறக்கும் அனுபவம் கொண்ட அவர், ஜம்மு-காஷ்மீர் முதல் வடகிழக்கு இந்தியாவுவரை மிகுந்த சவாலான நிலப்பரப்புகளில் சேடக், சீட்டா போன்ற ஹெலிகாப்டர்களை இயக்கியுள்ளார்.
2020ஆம் ஆண்டு அருணாச்சலத்தில் பொதுமக்கள் மீட்பு பணியில் பங்கேற்றதோடு, 2021ஆம் ஆண்டு மணிராங் மலைக்கு (21,650 அடி) மேற்கொண்ட அனைத்து பெண் முப்படைகளின் மலையேற்றப் பயணத்திலும் அவர் பங்கேற்று தனது திறமையை நிரூபித்துள்ளார்.
Leave a Reply