,

அண்ணாமலை பதவி ஏற்றது முதல் தான் கூட்டணியில் விரிசல் – முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி பேட்டி

sp velumani
Spread the love
அதிமுக கொரடாவும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி வேலுமணி செய்தியாளர்களுக்கு வியாழக்கிழமை கோவை அதிமுக அலுவலகத்தில் பேட்டி அளித்தார்

அப்போது பேசிய அவர், “நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அதிமுகவிற்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.கடந்த பல தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்திருந்தாலும், அடுத்து பல வெற்றிகளை பதிவு செய்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 19.3% வாக்குகள் அதிமுக பெற்றது. இந்த தேர்தலில் 20.4 சதவீத வாக்குகள் பெற்று வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது. மக்களுக்கு பல்வேறு திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி உள்ளது. தொடர்ந்து மக்கள் நலனில் அக்கறை கொண்டு அதிமுக செயல்படும்.

அண்ணாமலை பாஜக தலைவர் ஆனது முதல் தான் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு, பிளவுற்றுள்ளது. பாஜக அதிமுகவுடன் இணைந்து போட்டியிட்டு இருந்தால் 30 முதல் 35 இடங்களை வென்றிருக்க முடியும். அண்ணாமலை ஊடக பலத்துடனும், பணம் செலவு செய்தும் தோல்வியடைந்துள்ளார். மத்தியில் மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைந்த உடன், அண்ணாமலை தமிழக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி தர வேண்டும். 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையுடன் அதிமுக வெற்றி பெறும். ” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

பேட்டியின் போது முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன், சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ச்சுணன், பி.ஆர்.ஜி.அருண்குமார், கே.ஆர்.ஜெயராம், ஏ.கே.செல்வராஜ், அமுல் கந்தசாமி, கந்தசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்