தொடக்கத்தில் பொள்ளாச்சி கிழக்கு போலீசாரால் விசாரணை தொடங்கப்பட்ட இந்த வழக்கு, பின்னர் சிபிசிஐடியிடம் செல்ல, இறுதியில் சிபிஐக்கு மாற்றப்பட்டது. சிபிஐ தீவிர விசாரணை நடத்தி, திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன், ஹெரன்பால், பாபு, அருளானந்தம் மற்றும் அருண்குமார் ஆகிய 9 பேரையும் கைது செய்தது.
2019 மே 21-ஆம் தேதி கோவை மகளிர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு நீண்ட நாட்களாகத் தாமதமாக இருந்து வந்த நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தனி அறை ஒதுக்கி விசாரணை தொடங்கப்பட்டது.
2023 பிப்ரவரி 24-ஆம் தேதி சாட்சியங்கள் பெறப்படத் தொடங்கின. அறைக்கதவுகள் மூடப்பட்டு, காணொலி வாயிலாக சாட்சிகள் பெற்று, நீதிமன்ற நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இறுதியில், அரசு மற்றும் எதிர் தரப்பின் வாதங்கள் முடிவடைந்த நிலையில், தீர்ப்பு 2025 மே 13-ஆம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி நந்தினி தேவி அறிவித்திருந்தார்.
அதன்படி, செவ்வாய்க்கிழமை காலை கைதான 9 பேரும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் சேலம் சிறையிலிருந்து கோவை மகளிர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர். நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்களின் விபரங்கள் வெளியாகாத வகையில் நீதிமன்ற நடவடிக்கைகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டன.
தீர்ப்பில், 9 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி நந்தினி தேவி அறிவித்தார். அடுத்து, தண்டனை அளிக்கும் கட்டத்தில், முழு வாழ்நாள் சிறைத்தண்டனை விதிக்கப்படுவதாகவும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ. 85 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.
Leave a Reply