கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட MyV3Ads நிறுவனத்தில் முதலீடு செய்தும், பணம் திரும்பப் பெற முடியாமல் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது ஆதார ஆவணங்களுடன் கோவை பொருளாதார குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் என காவல்துறை அறிவித்துள்ளது.
சக்தி அனந்தன் என்பவரால் நடத்தப்பட்ட இந்த நிறுவனம், “மொபைல் செயலியில் தினமும் விளம்பரங்கள் பார்த்தால் வருமானம் கிடைக்கும்” என்றும், “ரூ.60 முதல் ரூ.1,21,000 வரை முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும்” என்றும் வாக்குறுதி அளித்து பலரை உறுப்பினர்களாக சேர்த்தது.
கோவை கிராஸ் கட் சாலையில் தலைமை அலுவலகம் இயங்கி வந்த இந்த நிறுவனம், தமிழ்நாடு மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் கிளைகளை ஏற்படுத்தியிருந்தது.
இந்த வழியில் பல கோடி ரூபாய் முதலீடு பெற்றதாக கூறப்படுகின்றது. முதலீட்டாளர்களுக்கு பணமளிப்பு பதிலாக ஆயுர்வேத மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதையடுத்து, சில முதலீட்டாளர்கள் எதிர்பார்த்தபடி பணம் பெறவில்லை என புகார் அளிக்கத் தொடங்கினர்.
இதனைத் தொடர்ந்து, MyV3Ads நிறுவனத்தின் மீது மோசடி தொடர்பான குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு, கோவை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதலீட்டு தொடர்பான ஆதார ஆவணங்களுடன் நேரில் வந்து புகார் அளிக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்கள் விரைவாக தொடர்புகொள்ள வேண்டும் என்றும் காவல் துறை தெரிவித்துள்ளது.
Leave a Reply