கோவை குனியமுத்தூர், டைமண்ட் அவன்யூ பகுதியில் திங்கட்கிழமை இரவு இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் கோரமான சம்பவமாக முடிந்தது. சுண்ணாம்பு காளவாய் பகுதியைச் சேர்ந்த அசாருதீன் என்ற 25 வயது வாலிபர், இந்த மோதலில் கத்திக் குத்து தாக்குதலுக்குள்ளாகி படுகாயம் அடைந்தார்.
தகவல் அறிந்து உடனே சம்பவ இடத்திற்கு வந்த குனியமுத்தூர் போலீசார், அசாருதீனை உடனடியாக மீட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், செவ்வாய்க்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காவல் துறையினரின் விசாரணையில், இரண்டு நாட்களுக்கு முன்னதாக குனியமுத்தூரில் இருசக்கர வாகன விபத்தில் ஏற்பட்ட வாக்குவாதமே இந்த மோதலுக்குக் காரணமாக இருந்தது எனத் தெரிகிறது. அப்போது அசாருதீனின் நண்பர்கள் மற்றும் எதிர் தரப்பினர் இடையே சண்டை வெடித்ததாகவும், போலீசில் புகார் அளிக்கப்பட்டு இருதரப்பினரும் எச்சரிக்கையுடன் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும், கொடுக்கல் வாங்கல் சம்பந்தப்பட்ட பிரச்னையும் இச்சம்பவத்திற்கு பின்னணி காரணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
திங்கட்கிழமை இரவு, டைமண்ட் அவன்யூ பகுதியில் இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் எழுந்தது. இது கைகலப்பாக மாறியதுடன், எதிர் தரப்பினரிலொருவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் அசாருதீனை சரமாரியாக குத்தினார். ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த அசாருதீன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக குனியமுத்தூர் போலீசார் அடிதடி வழக்கை கொலை வழக்காக மாற்றி, ஆறு பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஜூட் எனப்படும் அசார், மன்சூர், சதாம், அப்பாஸ், சம்சுதீன், முகமது ரபீக் ஆகியோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்களில் அப்பாஸ், சம்சுதீன், முகமது ரஃபீக் ஆகிய மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தற்போது தலைமறைவாக உள்ள மூவரை தேடும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Leave a Reply