முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் வண்டி பந்தயம்: அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்

rekla race
Spread the love

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் 72ஆம் பிறந்த நாளை முன்னிட்டு, கோவை வடக்கு மாவட்ட தி.மு.க. கவுண்டம்பாளையம் பகுதி கழகம் சார்பில், கால்நடை கலாச்சாரம் மற்றும் ரேக்ளா பாதுகாப்பு சங்கம் இணைந்து மூன்றாம் ஆண்டு மாட்டுவண்டி மற்றும் குதிரை வண்டி எல்கை பந்தயத்தை கோவை கணுவாயில் நடத்தினர்.

இப்போட்டியை தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கொடி அசைத்து துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

அவரது உரையில், “முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டில் பல்வேறு நலத்திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்துவதோடு, மாநிலத்தின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறார். இத்தகைய பாரம்பரிய போட்டிகள் தமிழகம் முழுவதும் நடத்தப்படுவது மகிழ்ச்சிக்குரியது,” எனக் குறிப்பிட்டார். மேலும், போட்டி ஏற்பாடு செய்தவர்களுக்கு முதலமைச்சர் சார்பாகவும், தானாகவும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

பந்தயத்தில், இரட்டை பெரிய மாடுகள் போட்டியில் முதலிடம் பெற்ற மாட்டிற்கு ரூ.20,000 பரிசாக வழங்கப்பட்டது. சிறிய மாடுகளுக்கான போட்டியில் முதலிடம் பெற்ற மாட்டிற்கு ரூ.15,000 வழங்கப்பட்டது.

அதேபோல், பெரிய குதிரை போட்டியில் வென்ற குதிரைக்கு ரூ.20,000 வழங்கப்பட்டது. சிறிய குதிரை போட்டியில் வெற்றிபெற்ற குதிரைக்கு ரூ.15,000 பரிசாகக் கிடைத்தது. புதிய குதிரைப் போட்டியில் முதல் இடம் பெற்ற குதிரைக்கு ரூ.10,000 பரிசாக அளிக்கப்பட்டது.

இந்த பரிசுகளும், வெற்றிக்கோப்பைகளும் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களால் நேரில் வழங்கப்பட்டன.