சமீபத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டெல்லிக்கு சென்று பாஜக மேலிட தலைவர்களை சந்தித்தார். பாஜக – அதிமுக கூட்டணி உறுதியானது என்று அண்ணாமலையிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சி நலனை கருத்தில் கொண்டு அண்ணாமலையே முடிவெடுக்கலாம் என்று கூறியதாக தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்த, டெல்லி திரும்பிய பிறகு அண்ணாமலை அளித்துள்ள பேட்டியில், தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் பதவிக்கான போட்டியில் தான் இல்லை என்றும் வெளிப்பைடயாக கூறி வருகிறார்.
இந்த நிலையில், பாம்பன் தூக்கு பாலத்தை திறக்க வரும் ஏப்ரல் 6ம் தேதி பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகை புரிகிறார். அவரது இந்த வருகையின் போது அதிமுக எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது. அவரை தொடர்ந்து, ஓபிஎஸுடனும் மோடி பேச இருக்கிறார்.
ஓ.பன்னீர்செல்வத்தை வைத்து தினகரன் மற்றும் சசிகலா இருவரையும் தங்கள் கூட்டணிக்கு வரச் சொல்லி அழைப்பு விடுக்க போவதாக தெரிகிறது. கிட்டத்தட்ட பிரிந்து போன அதிமுகவாசிகள் அனைவரையும் பாஜக தன்வசம் இழுக்க திட்ட மிட்டுள்ளதாக கூறப் படுகிறது.
இந்த கூட்டணி உறுதியானால் அதிமுக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ், சசிகலா, தினகரன் அனைவரும் மீண்டும் இணைவார்கள் என்று தெரிகிறது.
இதற்கிடையே, அண்ணாமலை தலைவர் பதவியில் இருந்து வெளியேறினால், அந்த பதவிக்கு யார் வருவார் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சியில் இருந்து எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு, பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்த விஜயதரணிக்கு அந்த வாய்ப்பு கிடைக்கலாம்.
கன்னியாகுமரியில் இவருக்கென்று தனி செல்வாக்கு உள்ளது. மெத்த படித்தவரும் கூட.
புள்ளி விவரங்களுடன் பேசும் திறமை கொண்டவர். இதனால், விஜயதரணிக்கு தலைவர் பதவி கிடைக்கலாம் என்று கூறுகிறார்கள். அதற்கேற்ற வகையில், அண்ணாமலை டெல்லி சென்று விட்டு திரும்பிய பிறகு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து விஜயதரணி பேசியுள்ளார்.
தமிழகத்தில் இருந்து வேறு எந்த பா.ஜ.க தலைவரையும் அமித்ஷா சந்திக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
நயினார் நாகேந்திரன், சரத்குமார் ஆகியோரும் தலைவருக்கான போட்டியில் இருப்பதாக கூறப்படுகிறது.
நயினார் நாகேந்தி ரனுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வாய்ப்புள்ளது.
நயினார் நாகேந்திரன் அதிமுகவில் இருந்து பா.ஜ.கவுக்கு வந்தவர். ஜெயலலிதா காலத்தில் அமைச்சராக இருந்தவர். அரசியலில் நல்ல அனுபவம் கொண்டவர். இவர் பாஜக தலைவரானால் ,அதிமுக கூட்டணிக்கு மிக பலமாக இருப்பார் என்றும் கருதப்படுகிறது. சரத்குமார் தேர்தல் காலத்தில் மட்டுமே தலை காட்டுவது அவருக்குள்ள குறைபாடு. எனினும், சரத்குமார் தன் கட்சியை கலைத்துக் கலைத்துவிட்டு பாஜகவில் இணைந்தவர்.
இவர் நாடார் சமூகத்தை சேர்ந்தவர்.
இதனால், தென் மாவட்டங்களில் கட்சியை எளிதாக வளர்க்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
யார் இந்த விஜயதரணி?
“தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு அங்கே துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி” போன்ற தமிழ் சிறப்புமிக்க பாடல்களை கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் கொள்ளுப் பேத்திதான் இந்த விஜயதரணி. இவரின் தாயார் பகவதி 1977ஆம் ஆண்டில் தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவராக இருந்தார். இதனால், சிறுவயது முதலே அரசியல் அறிவும், ஆர்வமும் இருந்தது. ராஜீவ் கொலை சம்பவத்தன்று விஜயதரணியின் தாயாரான பகவதியும் அந்தக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். அன்று நடந்த அந்தக் கோரச் சம்பவத்
தில் பகவதியும் காயமடைந்
துள்ளார். அதில் இருந்து மீண்ட பகவதிக்கு அந்தச் சம்பவத்தின் நடுக்கத்திலும் அச்சத்திலும் மீண்டு வர காலங்கள் எடுத்தன. அந்தக் கோரச் சம்பவத்தினால் அவர் காது கேட்கும் திறனை இழந்துள்ளார்.
ஒன்பது வயதில் தந்தை இறந்துவிட, அதன்பின் தாயின் அரவணைப்பிலே கல்லூரிப் படிப்பை படித்தார். 1987ஆம் ஆண்டு சென்னை சட்டக்கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே மாணவர் காங்கிரஸில் இணைந்து விட்டார்.
கட்சிப்பணியில் தீவிரமாகப் பணியாற்றி வந்த விஜயதாரணி கணிப்பொறியாளரான சிவகுமார் கென்னடி என்பவரைத் திருமணம் செய்தார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ள நிலையில், கணவர் சிவகுமார் கென்னடி உடல்நலக்குறைவால் 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் காலமானார்.
2016ஆம் ஆண்டு தமிழ்நாடு மகளிர் அணியின் தலைவராகவும், அகில இந்திய மகளிர் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராகவும் பொறுப்பு வகித்து வந்தார். அதைத்தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கொறடாவாக 2021ஆம் ஆண்டு மே மாதம் முதல் பாஜகவில் இணையும் ஒரு நொடி முன்பு வரை பொறுப்பு வகித்து வந்தார்.
கடந்த 2011, 2016, 2021 எனத் தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நின்று வெற்றிபெற்று தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக வலம் வந்தார். பின்னர், காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். விஜயதரணிக்கு இதுவரை பாரதிய ஜனதா கட்சியில் பெரிய அளவில் பொறுப்பு வழங்ப்படவில்லை என்ற குறை இருந்தது. அந்த குறை விரைவில் தீரலாம் என்கிற சூழல் உருவாகியுள்ளது.
தமிழக பாரதிய ஜனதா புதிய தலைவர் யார்… விஜயதரணிக்கு வாய்ப்பா?

Leave a Reply