கேரளாவில் ஒரு விவசாயியின் வீட்டில் வளர்ந்து வரும் கொங்குநாட்டு வெள்ளாடு ஒன்று அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. பீட்டர் என்பவர் தனது வீட்டில் ஆடு, கோழி, பசு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகிறார். அவரின் தோட்டத்தில் வளர்ந்து வரும் ‘கரும்பி’ என்ற பெட்டை ஆடு, அதன் மிகச் சிறிய அளவினால் உலகளவில் கவனம் பெற்றுள்ளது.
இந்த ஆடு 1 அடி 3 அங்குலம் (40.50 செ.மீ.) உயரம் மற்றும் 1 அடி 1 அங்குலம் (33.5 செ.மீ.) அகலம் கொண்டதாக உள்ளது. இயல்பாகவே சிறியதாக இருந்த இதனை பீட்டர் கவனித்ததையடுத்து, அவர் உள்ளூர் கால்நடை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் கின்னஸ் சாதனைக்கு முயற்சி செய்தார்.
கின்னஸ் குழுவினர் நேரில் வந்து இந்த ஆட்டை பரிசோதனை செய்தனர். அதன் உயரம் மற்றும் அகலத்தை சரிபார்த்த பிறகு, இது உலகில் வாழும் ஆடுகளில் மிகச் சிறியதாக இருப்பதை உறுதிப்படுத்தி, அங்கீகாரம் வழங்கியுள்ளனர்.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் பருவநிலை மற்றும் சூழ்நிலைக்கு ஏற்ப விவசாயிகள் பல்வேறு ஆடு வகைகளை வளர்த்து வருகின்றனர். தமிழ்நாட்டில் கன்னி, கறுப்பு, மருக்கை, குரும்பை, மேச்சேரி, தலைச்சேரி, நெல்லூர், சென்னை சிவப்பு போன்ற பல்வேறு நாட்டின ஆடுகள் காணப்படுகின்றன.
கோயம்புத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் வளர்க்கப்படும் குரும்பை ஆடுகள், செம்மறியாட்டு வகையைச் சேர்ந்தவை. இந்த ஆடுகள் மேய்ச்சலுக்கு மட்டுமே சார்ந்தவையாக இருந்து, பெரும்பாலும் கேரளா வரை ஓட்டிச் சென்று மேய்க்கப்படுகின்றன. இறைச்சிக்காகவும், உரமாகவும், மிருதுவற்ற ரோமத்திற்காகவும் அதிகளவில் வளர்க்கப்படும் இவை, பாரம்பரிய முறையில் வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு மிகுந்த வருமானத்தைக் கொடுக்கின்றன.
பீட்டர் வளர்த்து வரும் ‘கரும்பி’, இயல்பாகவே மிகச் சிறியதாக இருந்ததால், அவர் அதை உலக சாதனையாக பதிவு செய்ய முயன்றார். கின்னஸ் குழுவினர் அங்கீகாரம் அளித்ததோடு, இந்த உலகின் மிகச்சிறிய ஆடு எனப் பதிவு செய்தனர். கின்னஸ் அமைப்பு இதற்கான அதிகாரப்பூர்வ வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டதையடுத்து, ‘கரும்பி’ இணையத்தில் வேகமாக பரவி, உலகளவில் கவனம் பெற்றுள்ளது.
Leave a Reply