கோவை நீதிமன்ற பெண் ஊழியர், ‘ரிவர்ஸ் மிரர் ரைட்டிங்கில்’, உலக சாதனை படைத்துள்ளார்.கோவை, பீளமேடு, சேர்ந்தவர் முத்துமாரி,36. கோவை இரண்டாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். ஆங்கில எழுத்துக்களை ரிவர்ஸ் மிரர் ரைட்டிங்’ பின்னோக்கி எழுதும் முறையில்
தலைகீழாக எழுதி உலக சாதனை படைத்திருக்கிறார்.
சென்னை ‘கலாம்ஸ் வேல்டு ரிக்கார்டு’ நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்ற முத்துமாரி, இந்திய அரசியலமைப்பு சட்ட புத்தகத்தில், பகுதி மூன்றில், இடம்பெற்றுள்ள அடிப்படை உரிமைகள் என்ற தலைப்பிலுள்ள 50 குறிப்புகளை, கோடிட்ட தாளில், தலைகீழாக எழுதினார். ஆங்கில எழுத்துக்களை ‘ரிவர்ஸ் மிரர் ரைட்டிங்கில் 45 நிமிடம் 5 செகண்டில் நான்கு பக்கத்திற்கு எழுதி உலக சாதனை படைத்தார்.
எழுத்துக்களை கண்ணாடியில் பார்க்கும் போது, நேராக எழுதியது போல் இருக்கும். முத்துமாரிக்கு உலக சாதனை புரிந்ததற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. ரிவர்ஸ் மிரர் ரைட்டிங்கில், உலக சாதனை படைத்த முதல் நபர் முத்துமாரி என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்தியா புக் ஆப் வேல்டு ரிக்கார்டு’, நேசனல் டேலன்ட் அவார்டு-2024′ ஆகிய விருதுகளையும் பெற்று உள்ளார்.
முத்துமாரி பேசுகையில்
ஆசிரியர் பயிற்சி முடித்து, சென்னை ஐகோர்ட்டில், அலுவலக உதவியாளராக கடந்த 2021ம் ஆண்டில் பணிக்கு சேர்ந்தேன். தமிழ் வழியில் படித்த நான், ஆங்கில எழுத்துக்களை ‘கர்சிவ் லெட்டர்’ முறையில் எழுதுவதில் தனித்திறமை உண்டு.இதற்காக பள்ளி பருவத்தில் மாவட்ட அளவில் பரிசுகள் வென்றுள்ளேன்.
ஆரம்பத்தில் ஒவ்வொரு வார்த்தையை ‘ரிவர்ஸ் மிரர் ரைட்டிங்கில்’ எழுதி பழகினேன். இதை பார்த்து பலர் பாராட்டினர். அதன் பிறகு, வாக்கியங்களாக எழுத பயிற்சி மேற்கொண்டேன். இதில், சாதனை நிகழ்த்த வேண்டும் என்று முயற்சி எடுத்தேன். நான் பணியாற்றும் துறைக்கு பெருமை சேர்க்கும் வகையில், சட்ட புத்தகத்திலுள்ள அடிப்படை உரிமைகள் பற்றிய வாக்கியத்தை எழுதி உலக சாதனை புரிந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு முத்துமாரி கூறினார்.
உலக சாதனை படைத்த முத்துமாரியை, கோவை மாவட்ட முதன்மை செஷன்ஸ் கோர்ட் நீதிபதி விஜயா மற்றும் நீதிபதிகள், ஊழியர்கள் பாராட்டினர்.
Leave a Reply