, , , , ,

மாணவியை காப்பாற்றிய கோவை போலீஸ்காரருக்கு பாராட்டு

Spread the love

கோவை; கோவை மாவட்ட ஆயுதப்படையில் இரண்டாம் நிலை காவலராக செல்வ கணேஷ் பணியாற்றி வருகிறார். இவர், அயல் பணியாக சூலுார் போலீஸ் ஸ்டேஷனில் போக்குவரத்து பிரிவில் பணியாற்றினார்.இந்நிலையில், கடந்த, 5ம் தேதி செல்வகணேஷ் திருச்சி சாலையில், கலங்கல் சந்திப்பில் உள்ள சிக்னலில் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, சாலையை கடக்க முயன்ற மாணவி மீது லாரி மோதுவது போல வந்தது. இதை பார்த்த, செல்வ கணேஷ் துரிதமாக செயல்பட்டு மாணவியை விபத்தில் சிக்காமல் காப்பாற்றினார்.

போலீஸ்காரர் மாணவியை காப்பாற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. பல்வேறு தரப்பில் இருந்து அவருக்கு பாராட்டுகள் குவிந்தன. இந்நிலையில், நேற்று முன்தினம் கோவை வந்திருந்த கூடுதல் டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம், செல்வகணேஷை கோவை மாவட்ட எஸ்.பி., அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டினார். மேலும் அவரின் நற்செயலை பாராட்டும் விதமாக சான்றிதழ் வழங்கினார்.

பாராட்டு சான்றிதழ் வழங்கும் போது, மேற்கு மண்டல ஐ.ஜி., செந்தில் குமார், மாவட்ட எஸ்.பி., கார்த்திகேயன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.