,

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் மென்பொருள் மூலம் வரையறுக்கப்பட்ட வா​கனங்கள் பற்றிய புதிய பாடத்திட்டம் துவக்கம்

sri ramakrishna engineering college
Spread the love

கோவை​ ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, மகேந்திரா டெக்னிக்கல் அகாடமி மற்றும் மேத் ஒர்க்ஸ் உடன் இணைந்து மென்பொருள் மூலம் வரையறுக்கப்பட்ட வாகனங்கள்(எஸ்டிவி ) பற்றிய புதிய படிப்பு தொடங்கியுள்ளது. கல்லூரியில் செயல்படும் தொடர் கல்வி மையம் மூலம் வழங்கப்படும் இந்த பாடநெறி, பாரம்பரிய வாகன அமைப்புகளில் இருந்து மென்பொருள் மைய அணுகுமுறைக்கு மாறுவதை மையமாகக்கொண்டு, வாகன தொழில்நுட்பத்தில் மேம்பட்ட அறிவை மாணவர்களுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

நிகழ்ச்சிக்கு முதல்வர் முனைவர் ஏ.சௌந்தர்ராஜன் அனைவரையும் வரவேற்றார். எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் கல்வித்துறை இயக்குநர் முனைவர் என்.ஆர். அலமேலு, தலைமை வகித்தார். அவரது உரையில், ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, ஏற்கனவே மகேந்திரா டெக்னிக்கல் அகாடமி உடன் எலக்ட்ரிக் மொபிலிட்டியிலும் மேத்ஒர்க்ஸ் உடன் மாடல் பேஸ்டு சிஸ்டம்ஸ் இன்ஜினியரிங் போன்ற இருபது கிரெடிட் ஸ்பெஷலைசேஷன் படிப்புகள் மூலம் இணைந்து பணியாற்றி வருவதாகக் குறிப்பிட்டார். அவர்மேலும், இந்த சாஃப்ட்வேர் வாகனப்படிப்பு முதல் முறையாக நாட்டில் அறிமுகப்படுத்தப்படுவதாக கூறினார். தகவல் தொழில்நுட்பத்துறை தலைவர் முனைவர் எம்.செந்தமிழ்செல்வி இப்பாடத்திட்டம் எவ்வாறு வகுக்கப்பட்டுள்ளது என்பதை பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.

இந்த பாடத்திட்ட அறிமுக விழாவில், மஹிந்திரா டெக்னிக்கல் அகாடமியின் துணைத்தலைவர் டாக்டர்.ஷங்கர் வேணுகோபால் மற்றும் இந்தியாவின் மேத்ஒர்க்ஸ் நிறுவனத்தின் கல்வி இயக்குநர் சந்தன்பிரமானிக் உட்பட பலர் கலந்துகொண்டனர். வாகனத் துறையின் வளர்ந்துவரும் நிலப்பரப்பு மற்றும் எதிர்கால தொழிலாளர்களை வடிவமைப்பதில் இத்தகைய படிப்புகளின் முக்கியத்துவம் பற்றிய மதிப்புமிக்க நுண்ணறிவுகளை அவர்கள் பகிர்ந்துகொண்டனர். 

தொழில் வல்லுநர்களால் வடிவமைக்கப்பட்ட இப்பாடநெறி, கணினி கட்டமைப்புகள், தேர்வுமுறை உத்திகள் மற்றும் வாகன அமைப்புகளின் மூலம் கிளவுட் தொழில்நுட்பங்களின் ஒருங்கிணைப்பு பற்றிய ஆழமான கற்றலை வழங்குகிறது.  மேலும், வாகனத்துறையில் மாணவர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கி, அதன்மூலம் பல்வேறு தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை முன்னெடுத்துச் செல்ல உதவும்.

நிகழ்வில், காணொளி விளக்கக்காட்சி, மஹிந்திரா டெக்னிக்கல் அகாடமி மற்றும் மேத்ஒர்க்ஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லுனர்களின் முக்கிய உரைகள், பாடநெறி சிற்றேடு வெளியீடு என்பன இடம்பெற்றன.​  இந்நிகழ்ச்சியில், கல்லூரியின் தொழில்துறை தலைவர் கணேஷ், பெங்களூரு, சென்னை மற்றும் கோவையைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள், பல்வேறு துறைத்தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். விழா இறுதியில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல்துறை பேராசிரியர். ஆர். அனுராதா நன்றி கூறினார்.