கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் இன்று அதன் சாதாரண மாமன்ற கூட்டம், மேயர் எஸ் ஏ சத்யா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பெரும்பாலான திமுக உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை. அதேபோல கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக உறுப்பினர்கள் தங்களது வார்டு பகுதியில் எந்தவித அடிப்படை வசதிகளையும் இதனால் வரை நிறைவேற்றி தரப்படவில்லை என குற்றம் சாட்டினார்கள். தொடர்ந்து அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் வார்டுகளுக்கு மட்டும் எந்தவித மேம்பாட்டு பணிகளும் செய்யப்படவில்லை என குற்றம் சாட்டி கூட்டத்தில் பங்கேற்ற 16 அதிமுக உறுப்பினர்களும் இன்று கூட்டத்தை புறக்கணிப்பதாக சொல்லி வெளிநடப்பு செய்தனர். இதனால் மாநகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து அதிமுக உறுப்பினர்களின் வார்டுகள் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் மூன்று ஆண்டுகளாக எந்தவித மேம்பாட்டு பணிகளும் நடைபெறாத காரணத்தால் வாக்களித்த மக்களுக்கு பதில் சொல்ல இயலாத நிலைக்கு தங்கள் தள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் அதிருப்தி தெரிவித்தனர். மேலும் மாநகராட்சி நிர்வாகமானது இதுவரை அந்த மாநகராட்சிக்கான ஒருவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளாத நிலையில் பேரூராட்சி நிலையிலேயே செயல்படுவதாக மேலும் குற்றம் சாட்டினார்கள். தொடர்ந்து பேசிய அதிமுக உறுப்பினர்கள் இதனை கண்டித்து இன்று அடையாளமாக வெளிநடப்பு செய்யப்படுவதாகவும் மேலும் இதே நிலை நீடிக்குமேயானால் மாமன்ற கூட்டு அரங்கிலேயே சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே, துணை மேயர் ஆனந்த அய்யா உட்பட 19 திமுக மாமன்ற உறுப்பினர்கள் தாங்கள் அதிருப்தியில் இருப்பதாகவும், மாமன்ற கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் தாங்கள் இதில் பங்கேற்காமல் தனியார் ஓட்டலில் தனியாக ஆலோசனை கூட்டம் நடத்தி தங்களது கடும் அதிருப்தியை தெரிவிக்கும் விதமாக மேயரிடம் மனு அளிப்பதாகவும் கூறி மேயர் எஸ் ஏ சத்யாவிடம் மனு அளித்துள்ளனர். ஆளும் கட்சி எதிர்க்கட்சி இரண்டு பேரும் மாமன்ற கூட்டத்தை இன்று புறக்கணித்து மேற்கொண்ட நடவடிக்கைகளால் ஓசூர் மாநகராட்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Leave a Reply