ஆ.வெ.மாணிக்கவாசகம்
ஒரு மனிதனின் எண்ணமும் செயல்களுமே அவரை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் என்பதற்கு இணங்க ,வாழ்ந்து வருபவர் கோவையில் புகழ் பெற்ற வழக்கறிஞர் என் .சுந்தர வடிவேலு . வள்ளுவனின் வாக்குக்கு ஏற்ப, புகழோடு தோன்றி, புகழோடு செயலாற்றி வருபவர். சுந்தர வடிவேலுவின் பரம்பரையினர், நீதி பெற்றுத் தரும் வழக்கறிஞர் பணியினை வாழையடி வாழையென செய்து புகழ் பெற்றவர்கள்.
திருச்சி திருமலை கொழுந்து ரத்தினசபாபதி பிள்ளை அவர்கள், சுந்தர வடிவேலுவின் தாத்தா ஆவார். 1921-ம் ஆண்டு முதல் சுந்தர வடிவேலுவின் தாத்தா வழக்கறிஞர் பணியினை கோவையில் தொடங்கியவர். ஆர் .நடனசபாபதி அவர்கள் சுந்தர வடிவேலுவின் தந்தை. அவரும் வழக்கறிஞர் தொழிலை சிரமேற்று செய்தவர். 1957-ம் ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி நடன சபாபதி சரஸ்வதி தம்பதியினருக்கு மகனாக பிறந்தவர் சுந்தர வடிவேலு. கோவை பாப்பநாயக்கன் பாளையம் மணி மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த இவர்,பீளமேடு பி .எஸ் .ஜி . கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை பட்டம் பயின்றார்.
1983-ம் ஆண்டு கோவையில் அரசு சட்டக் கல்லூரி தொடங்கப்பட்டது. அதில் முதல் பேட்ச் மாணவராக சட்டம் பயின்று வழக்கறிஞர் ஆனவர். கோவையில் புகழ் பெற்ற வழக்கறிஞரும், நன்னெறி கழக தலைவராக விளங்கியவருமான பி.குப்புசாமி தான்,சுந்தர வடிவேலுக்கு குருநாதர் மற்றும் மிகச் சிறந்த வழிகாட்டியாக திகழ்ந்தவர். சுந்தரவடிவேலின் மனைவி முருகாம்பாள். இவரும் வழக்கறிஞர் ஆவார்.
சுந்தரவடி வேலு – முருகாம்பாள் தம்பதியினருக்கு பிரவீன் ரத்தினம் என்ற மகனும், பிரீத்தி விக்ரம் என்ற மகளும் உள்ளனர். பிரவீன் ரத்தினம், லண்டன் பல்கலைக்கழகத்தில் சட்ட மேற்படிப்பு பயின்று, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். அவரது மனைவி நேத்ரா, நுங்கம்பாக்கத்தில் பள்ளி நடத்தி வருகிறார்.
பிரீத்தியின் கணவர் விக்ரம் சென்னையில் மருந்து உற்பத்தி தொழிற்சாலை நடத்தி வருகிறார்.
வழக்கறிஞராக உள்ள சுந்தர வடிவேலு, ஏழை எளிய மக்களின் நீதிக்காக வாதாடும் வழக்கத்தை கொண்டுள்ளவர்.
வழக்கறிஞர் பணி மட்டுமல்லாது, சமூக, சமுதாயப் பணிகளில் மிக அதிக நாட்டம் கொண்டவர். 1992-ம் ஆண்டு முதல் ரோட்டரி சங்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டு, சமுதாய மேம்பாட்டிற்கும்,பொது மக்கள் நலன் சார்ந்த உயர்வுக்கும் பாடுபட்டு வருகிறார். ரோட்டரி சங்க தலைவராக இருந்து பல சமுதாய பணிகளில் தம்மை அதிகமாக ஈடுபடுத்திக் கொண்டவர் சுந்தர வடிவேலு.
சமுதாய மேம்பாட்டுக்காக சுமார் 3 கோடி ரூபாய்க்கு மேல் உதவிக்கரம் நீட்டி உள்ளார். மேலும் ரோட்டரி சங்கம் மூலம் ரூ.9 கோடி மதிப்பில் பள்ளி கட்டிடம்,அரசு மருத்துவமனையில் கட்டிடம், கல்வி உதவித்தொகை என பல பணிகள் செய்துள்ளார் . கோவை வழக்கறிஞர் சங்க தலைவராகவும், மாவட்ட ரோட்டராக்ட் பிரதிநிதியாகவும், மனித உரிமைகள் பிரிவு நிர்வாகியாகவும், பெரியார் பல்கலைக்கழக சென்ட் உறுப்பினராகவும் சுந்தரவடிவேலு பதவி வகித்தவர்.
அமெரிக்க, ஆஸ்திரேலியா, ஜப்பான், இங்கிலாந்து உள்ளிட்ட உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். மேலும் கோவை காஸ்மாபாலிடன் கிளப், கோவை கோல்ப் கிளப்,கோவை ரைபில் கிளப் ஆகியவற்றில் தலை சிறந்த உறுப்பினராக சுந்தரவடி வேலு உள்ளார். சிபிஐயின் அரசு வழக்கறிஞராக,
இருந்த அனுபவம் பெற்றவர் .
ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்ட சுந்தர வடிவேலு, பகவான் ராகவேந்திரரை குருவாக ஏற்றுக் கொண்டு, அவர் வழி நடப்பவர். ராம பக்த ஜன அறக்கட்டளை மூலம் அய்யர் மலை ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோவில்,ஸ்ரீ ராகவேந்திரர் ஆலயம் உள்ளிட்ட பல கோவில்களில் திருப்பணிகளை செய்துள்ளவர்.
மாவட்ட ரோட்டரி கிளப் – 3201 மாவட்ட கவர்னராக போட்டியின்றி தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சுந்தரவடிவேலு, ஜூலை 1-ம் தேதி திங்கட்கிழமை மாலை 6:00 மணி அளவில் கோவை – பொள்ளாச்சி மெயின் ரோடு ஈச்சனாரியில் உள்ள செல்வம் மஹாலில் 176 ரோட்டரி சங்கங்களின் கவர்னராக பதவி ஏற்க உள்ளார்.
கோவை மாநகரம் கேரள மாநிலம் பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், கொச்சின் மாநகரம் ,மூவாட்டுபுழா மற்றும் இடுக்கி ஆகிய பகுதிகளில் உள்ள 176 ரோட்டரி சங்கங்களுக்கு கவர்னராக பதவி ஏற்கும் விழாவில் 176 ரோட்டரி சங்கங்களின் பிரதிநிதிகள், இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் உள்ள ரோட்டரி சங்க பிரதிநிதிகள்,
நீதிபதிகள், வழக்கறிஞர்கள், தொழிலதிபர்கள் என எட்டாயிரத்திற்கும் அதிகமானோர் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
சுந்தர வடிவேலு பேட்டி
மாவட்ட கவர்னராக பதவி ஏற்க இருக்கும் சுந்தரவடிவேலு, தமது பதவிக்காலத்தில் செய்ய உள்ள பணிகள் குறித்து கூறுகையில், 3201 மாவட்ட ரோட்டரி சங்கம், இந்தியாவிலேயே முதன்மை பெற்ற ரோட்டரி சங்கமாகும். சமூக, சமுதாய பணிகள், உலக அமைதி ,ஏழை எளியோருக்கு உதவுதல் உள்ளிட்ட உயர்ந்த நோக்கத்துடன் ரோட்டரி சங்க பணிகள் சிறப்புடன் நடைபெறுகிறது. மனித குலத்தின் முதல் தோன்றலான தோடர் இன மக்களுக்கு நீலகிரி மாவட்டத்தில் 100 வீடுகள் கட்டித் தரப்படும்.
கோவை மாவட்டத்தின் தொன்மையான கௌசிகா நதியினை சீரமைக்க உறுதி கொண்டுள்ளோம். மேற்கே குருடி மலை அடிவாரத்தில் உற்பத்தியாகும் கௌசிகா நதி, 54 கிலோ மீட்டர் தூரம் பயணித்து பவானி ஆற்றின் வழியாக காவிரியில் கலக்கிறது. இந்த நதியினை, தமிழக அரசின் ஒத்துழைப்புடன் சீரமைக்க திட்டமிட்டுள்ளோம்.
அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்த உள்ளோம்.
கோவையில் உள்ள நிர்மலா கல்லூரியில், கல்லூரி கட்டணம் செலுத்த முடியாத ஏழை மாணவிகள் 40 பேருக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஆகும் கல்வி கட்டணத்தை ஏற்க உள்ளோம் என தெரிவித்தார்.
பேட்டியின் போது,மாவட்ட பொதுச் செயலாளர் சுப்பிரமணியம், அமைப்பாளர் பத்ம குமார் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
Leave a Reply