கோவை கொடிசியா மைதானத்தில் நாளை திமுக சார்பில் முப்பெரும் விழா நடைபெற உள்ளது. இவ்விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். மேலும் இந்நிகழ்வில் தமிழக எம்பிக்கள், அமைச்சர்கள், திமுக மற்றும் கூட்டணி கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட திமுக முக்கிய நிர்வாகிகள் என பலர் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில் இவ்விழாவில் கலந்து கொள்வதற்காகவும் கோவையில் அமையப்பட உள்ள கிரிக்கெட் மைதானம் குறித்து ஆய்வு மேற்கொள்ளவும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். கோவை விமான நிலையத்தில் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர். கோவை மாவட்டத்தில் நவீன வசதிகளுடன் கூடிய சர்வதேச அளவிலான கிரிக்கெட் விளையாட்டு மைதானம் அமைப்பது தொடர்பாக ஒண்டிப்புதூர், திறந்தவெளி சிறை மைதானத்தினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் சு.முத்துசாமி, தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்யா மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி, மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ப. ராஜ்குமார், மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், துணை மேயர் ரா. வெற்றிச்செல்வன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்
Leave a Reply