, ,

இலவச லேப்டாப் திட்டம் – எதிர்பார்க்கும் கால கட்டம் 

Free laptop
Spread the love

ஆ.வெ.மாணிக்கவாசகம்

இன்றைய கால கட்டம் உயர் தொழில் நுட்ப புரட்சி யுகம் .இப் புரட்சியின் நுகர்ச்சியை அனைவருமே அனுபவிக்கின்றனர்.  மேலும்,
இத் தொழில் நுட்ப அசுர வளர்ச்சியால் எல்லாமே எளிதாக ‘கை’ வரப் பெறுகிறது.
எளிதான தகவல்களுக்கு, ஏற்றம் தர பல பயன்பாட்டு கருவிகள்  இருந்தாலும், மடிக்கணினி (Laptop) இன்றியமையாத ஒன்றாகி விட்டது.
1968-ம் ஆண்டில் அமெரிக்க நாட்டைச் சார்ந்த ஆலன் கே என்ற கணிப்பொறி விஞ்ஞானி மடிக்கணினியின் முன் மாதிரியை முதன் முதலாக வடிவமைத்தார். அது கே டைனாபுக் என அழைக்கப்பட்டது.
முதல் லேப்டாப்
தொடர்ந்து 1979இல் பிரிட்டனை சேர்ந்த வில்லியம்சன் மோக்ரிட்ஜ் என்ற விஞ்ஞானி கிரிட் சிஸ்டம் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்காக முழுமையான லேப்டாப்பை தயாரித்தார். இதுவே முதல் லேப்டாப் என கூறப்படுகிறது.
1980-ம் ஆண்டு விண்வெளி விண்கலத்தில் இந்த லேப்டாப் பயன்படுத்தப்பட்டதாக, அமெரிக்க விண்வெளி மையமான நாசா குறிப்பிட்டு
உள்ளது. 1981-ம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி ஆடம் ஆஸ் போர்னால் என்ற கணிப்பொறி விஞ்ஞானி லேப்டாப்களை உலகளாவிய அளவில் சந்தைப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டார் .
தொடர்ந்து 1983 ஆம் ஆண்டு கவிலன் என்ற விஞ்ஞானி முதன் முதலாக  லேப்டாப்களை விளம்பர உலகிற்கு கொண்டு வந்தார்.
அவரது முயற்சி விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளிட்ட அனைவரின் பாராட்டுதலை பெற்றது.
இந்தியாவில் அறிமுகம்
1989 ஆம் ஆண்டு தொழில்நுட்பத் துறையில் முன்னணியில் உள்ள இந்தியாவின் HCL நிறுவனம் நம் நாட்டிற்கு லேப்டாப்களை அறிமுகம் செய்தன. தற்போது காலத்திற்கு தகுந்தாற் போல சிறிய ரக லேப்டாப்கள் , இலகுவாக, அதி சக்தி வாய்ந்த கருவியாக உலகில் உள்ள பலருக்கும் இன்றியமையாத ஒன்றாக விளங்கி வருகிறது.
அதிமுக அரசு
2011-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில், அதிமுக தேர்தல் அறிக்கையில்,ஏழை எளிய பள்ளி மாணவ – மாணவிகளுக்கு விலையில்லா அம்மா மடிக்கணினி திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து புரட்சித்தலைவி ஜெயலலிதா தலைமையினான அரசு பதவி ஏற்ற. பின்,2011-ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் தேதி விலையில்லா மடிக்கணினி திட்டத்தை அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா தொடக்கி வைத்தார்.
2011 முதல் 2016 வரையிலான ஐந்தாண்டு காலத்திற்கு 68 லட்சம் மடிக்கணினிகள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு  வழங்க ரூ. 10,200 கோடி செலவில் திட்டம் உருவாக்கப்பட்டு, முதல் கட்டமாக 9 லட்சத்து 12 ஆயிரம் மடிக்கணினிகள் ரூ.9 ஒன்பது லட்சத்து 12 ஆயிரம் மதிப்பீட்டில் தொடக்கி வைக்கப்பட்டது.
தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் ஏழை எளிய பள்ளி மாணவர் – மாணவிகள் அனைவருக்கும் விலையில்லா லேப்டாப்கள் வழங்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனா நோய்  தாக்கியதால்,விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
மேலும் உலக அளவில் வியாபார மந்தம், உற்பத்தி தொய்வு உள்ளிட்ட காரணங்களால் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி திட்டத்திற்கு, ஏற்கனவே, பற் பல லேப்டாப் தயாரிக்கும் நிறுவனங்கள் தமிழக அரசின் டெண்டரில் பங்கேற்க ஆர்வம் காட்டவில்லை.
2011 ஆம் ஆண்டு  ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக தலைமையிலான அரசு, பதவியேற்றது. பள்ளி மாணவ – மாணவிகளுக்கு விலை இல்லா மடிக்கணினி திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த  முதல்வர் மு. க .ஸ்டாலின் அறிவிப்பு வெளியிடுவார் என திமுக தரபப்பில் தெரிவிக்கப்பட்டது.
எதிர்பார்ப்பு
மேலும் பள்ளி,கல்லூரி  மாணவ மாணவிகள், பெற்றோர்கள், அரசு பள்ளி ஆசிரியர்கள் என பலரும், லேப்டாப்கள் அரசு தரப்பில் வழங்கப்படும் என 2011-ம்  ஆண்டே எதிர்பார்த்து இருந்தனர்.
மேலும் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சியினர், பத்திரிகையாளர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் அறிவு சார்ந்து பார்க்கப்படும் லேப்டாப்புகளை தமிழக அரசு வழங்கும் என எதிர்பார்த்தனர்.
2024-2025 -ம் கல்வி ஆண்டு தொடங்கப்பட உள்ள நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக திமுக அரசு லேப்டாப் வழங்குவது குறித்த அறிவிப்பு வெளியிடாதது பெரும் ஏமாற்றமாக கருதப்படுகிறது.
மேலும், தமிழக அரசு தாக்கல் செய்த  பட்ஜெட்டிலும் லேப்டாப் பற்றிய அறிவிப்புகள் இல்லை.
திமுக தேர்தல் அறிக்கையின்  163-ம் அறிவிப்பில் மாணவ – மாணவிகளுக்கு இலவச கைக் கணினி (Tablet) வழங்கப்படும் என  அறிவிக்கப்பட்டிருந்தது. அது குறித்த அறிவிப்பும் இன்று வரை வெளியிடப்படவில்லை.
கல்வி அமைச்சர்
தமிழக கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளி மாணவ – மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்குவது குறித்து குறிப்பிடும் போது  இன்றைய தகவல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு லேப்டாப்கள் மிகவும் தேவையான ஒன்று தான்.
தமிழக அரசின் நிதி நிலைமை சரி செய்யப்பட்ட பின்பு அனைத்து பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கும் இலவச லேப்டாப்கள் வழங்கப்படும் என அவ்வப்போது தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,   அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கில் அதிமுக அரசால் தொடர்ந்து, சிறப்புற வழங்கப்பட்டு வந்த லேப்டாப்களை இந்த விடியா திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் நிறுத்தப்பட்டுள்ளது.
இன்னும் சில நாட்களில் புதிய கல்வி ஆண்டு தொடங்க உள்ள நிலையில் இந்த ஆண்டுக்கான லேப்டாப் வழங்குவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாதது கண்டனத்திற்குரியது. லேப்டாப் வழங்க வேண்டும் என்ற அரசு பள்ளி மாணவர்களின் ஒருமித்த எதிர்பார்ப்பை திமுக அரசு நிறைவேற்ற முன்வருமா? அல்லது அதிமுக அரசால் கொண்டு வரப்பட்ட திட்டம் என்ற காழ்ப்புணர்ச்சியில் இந்த ஆண்டும் ஏதேனும் நொண்டிச்சாக்கு சொல்லப் போகிறீர்களா?  எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.
அறிவுப் புரட்சிக்கு கருவியாக ஆளுமை காட்டி வரும் இலவச லேப்டாப்களை பள்ளி கல்லூரி மாணவ – மாணவிகளுக்கு  வரும் கல்வி ஆண்டு தொடங்கப்பட உள்ள நிலையில், வழங்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ரம்யா வேணுகோபால்
அதிமுக மாநில நிர்வாகி
இளைஞர் – இளம் பெண்கள் பாசறை
“புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ‘எல்லோருக்கும் எல்லாம் ‘ கிடைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் அதிமுகவை தொடங்கி ஆட்சி அமைத்தார்.
ஜமீன்தாரர் பிள்ளைகளுக்கு எல்லாம் எளிதாக கிடைக்கும். ஆனால் ஏழை எளிய மக்களுக்கு எதுவும் கிடைப்பது எட்டாக்கனி.
அவர்களை உயர்த்தும் கொள்கை கொண்டது அதிமுக. தமிழக பள்ளி குழந்தைகள், உலகின் தலைசிறந்தவர்களாக உயர வேண்டும் என்ற நோக்கில் புரட்சித்தலைவியால் விலையில்லா மடிக்கணினி திட்டம் கொண்டு வரப்பட்டு செயல்படுத்தப்பட்டது.
ஆனால் இந்த திமுக அரசு  நிறுத்தி விட்டது. டாஸ்மார்க் விற்பனை உயர்வு, போதைப் பொருள் விற்பனை என அனைவரையும் அழிவு பாதைக்கு இட்டுச் செல்லும்  இந்த அரசிடம் இலவச லேப்டாப் கிடைக்குமா? “
வி. அன்னம்மாள்
மாநகர செயலாளர்
மகளிர் அணி கோவை
“கடந்த அதிமுக அரசு, நிதியினை முறையாக கையாளாத காரணத்தால் திராவிட மாடல் அரசு  பல திட்டங்களை செயல்படுத்த முடியாத சூழல்.
அதில் இலவச லேப்டாப் திட்டமும் ஒன்று. நிதி நிலைமை சரியான பின்பு இலவச லேப்டாப் திட்டம் செயல்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
 உலகமே போற்றும் காலை சிற்றுண்டி திட்டம், அரசு கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ஆயிரம், நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட திட்டங்களால் கல்வியில் புரட்சி செய்து வருகிறது   திமுக அரசு”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *