கோவை விமான நிலையத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், கோவையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் பிரமாண்டமான ரோடு ஷோ பொதுமக்கள் ஆதரவுடன் நடைபெற உள்ளது. பிரதமர் மோடி கடந்த ஒரு வார காலமாக தென் இந்தியாவை மையமாக வைத்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் நாளை சேலத்தில் நடைபெறும் பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். தென்னிந்தியாவில் முழுமையாக பிரதமர் மோடி தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இது பாஜகவினருக்கு மிகப்பெரிய ஊக்கம் அளிக்கும் வகையிலும், தமிழ் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையிலும் உள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளாக பிரதமர் மோடி சிறந்த நல்லாட்சியை தந்துள்ளார், நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதே அவரது எண்ணம். இந்தியாவை வல்லரசு நாடாக்க வேண்டும் என பிரதமர் உழைத்துக் கொண்டுள்ளார். தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும் பாஜகவிற்கு ஆதரவு அளித்து வருகிறார்கள். தேசத்திற்கு எதிரானவர் யார் என்பது மக்களுக்கு தெரியும், நாட்டை வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்வது யார் என்பதும் மக்களுக்கு தெரியும் .
கொள்ளையடிப்பதும், ஊழல் செய்வதும் தான் இண்டி கூட்டணி நோக்கம். நாட்டின் வளர்ச்சி தான் பாஜக இலக்கு. 2 ஜி ஊழல் வழக்கில் மிக விரைவில் தீர்ப்பு வரும். யாரையும் மிரட்டி தேர்தல் பத்திர நிதி வாங்கவில்லை. 2 ஜியில் ஆகாயத்தில் ஊழல் செய்தது ஆ.ராசா. அதனால் பயன்பட்டது திமுக குடும்பம். ஊழல் பற்றி பேச எந்த அருகதையும் திமுகவிற்கு கிடையாது. பிரதமர் மோடி ஊழலற்ற நிர்வாகத்தை தந்து வருகிறார். ராகுல்காந்தி, ஸ்டாலின் தோல்வியின் விளிம்பில் இருக்கிறார்கள். நாடாளுமன்ற தேர்தலில் 400 க்கும் மேற்பட்ட தொகுதிகளை வென்று மூன்றாவது முறையாக பிரதமர் மோடி ஆட்சி அமைப்பார். கோவை பாஜக கோட்டையாக உள்ளது. இத்தொகுதியில் பாஜக வேட்பாளர் போட்டியிடுவது உறுதி” என்று பேசினார்.
Leave a Reply