ஆடு, மாடு, கோழி, நாய்களுடன் உலாவும் இவர்கள், கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் வசிக்கும் திருநங்கைகள். 15 வருடத்திற்கு முன்பு இப்பகுதியில் கால் பதித்த இவர்கள், இன்று வாழ்வில் தடம் பதித்து சாதித்து வருகின்றனர். சமுதாயத்தில் சக மனிதர்களிடம் அரவணைப்பு கிடைக்கவில்லை என்றாலும், திருநங்கைகள் பொதுவெளியில் புறக்கணிக்கப்பட்ட விதம், அவர்களுக்கு அளவிட முடியாத வலியை தந்திருக்கின்றது. வீடு வாடகைக்கு கிடைக்காமலும், கிடைக்கும் வீடுகளுக்கு கூடுதல் வாடகை தொகை வசூலிப்பதுமாக இவர்கள் வாழ்க்கை நகர்ந்தது. உளவியல் நெருக்கடியுடன் பொருளாதார நெருக்கடியும் இவர்களின் வாழ்க்கையை பாரத்துடன் நகர்த்தி இருக்கின்றது.
இந்த நிலையில் அன்றாட வாழ்க்கையை நடத்தவே போதுமான பொருள் ஈட்டல் இல்லாமல் தவித்த திருநங்கைகள், என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து இருக்கின்றனர். அப்பொழுது தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பை அனுகிய திருநங்கை ரதி, தமிழ்நாடு சமூக நலத்துறை மூலமாக, சுயதொழில் செய்ய 20 ஆயிரம் ரூபாய் நிதி கிடைக்கும் என்பதை தெரிந்து கொண்டார். அவர்களின் உதவியுடன் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பாக 20 ஆயிரம் ரூபாய் தொகையை பெற்று, ஒரு கன்றுக்குட்டி இரண்டு ஆட்டுக்குட்டிகளை வாங்கினார். ஆனால் தாங்களே தங்க இடம் இல்லாமல் தவிக்க, ஆடு மாடுகளுக்கு படும் அல்லல் அளப்பரியதாக அவர்களுக்கு இருந்தன. அப்போது ரதி ஒரு இடம் வாங்க முடிவெடுத்தார். முட்புதராக இருந்த 5 செண்ட் இடத்தை 20 லட்சத்துக்கும் மேல் செலவு செய்து வாங்கினார். தான் வைத்திருந்த நகையை வைத்து 10 லட்சம் ரூபாய் சேர்த்த ரதி, எஞ்சிய தொகைக்கு வங்கியில் கடன் பெற்று இந்த இடத்தை வாங்கினார்.
Leave a Reply