கோவை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு, போதை பொருட்கள் நடமாட்டம் தடுப்பு மற்றும் பருவ மழையினால் சேதமடைந்த – பழுதடைந்த சாலைகள் சீரமைக்க கோரியும், குடிநீர் பிரச்சனை தீர்க்ககோரியும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் கே.அர்ச்சுணன், ஏ.கே.செல்வராஜ், செ.தாமோதரன், டி.கே.அமுல்கந்தசாமி, கே.ஆர்.ஜெயராம், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சாந்திமதி தோப்பு அசோகன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் தோப்பு க.அசோகன் ஆகியோர் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இதை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறுகையில், “கோவை மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கேடு, போதை பொருட்கள் விற்பனை, அன்டைய மாநிலங்களுக்கு கனிமவளம் கடத்தல் மற்றும் அதிமுக ஆட்சி காலத்தில், கோவை மாவட்ட மக்களின் நலன் கருதி, செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்ட பாலங்கள், குடிநீர் திட்டப்பணிகள், சாலைப்பணிகள், சீர்மிகு நகர திட்டப்பணிகள், விமான நிலையம் விரிவாக்கம், மெட்ரோ ரயில் திட்டம் போன்ற மக்களின் முக்கிய அடிப்படை வசதிகள் மேம்படுத்துதல் ஆகிய நிகழ்வுகளில் மாவட்ட நிர்வாகமும் , தமிழக அரசும் மெத்தன போக்குடன் கண்டுகொள்ளாமல் கோவை மாவட்ட மக்களை தொடர்ந்து புறக்கணிப்பது மிகுந்த வேதனைக்குரியதாகும்.
சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் ஒதுக்கீடு செய்யப்படும் பணிகளுக்கு அந்தந்த துறைகளில் நிர்வாக அனுமதி வழங்குவதில் வேண்டுமென்றே காலதாமதம் செய்யப்படுகிறது. குறிப்பாக, மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஏ.கே.செல்வராஜ் நகராட்சி ஆணையாளரிடம் தொலைபேசி வாயிலாக உரிய முன் அனுமதி பெற்று, நகராட்சி கவுன்சிலர்களோடு தனது சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து பரிந்துரைக்கப்பட்டுள்ள அனைத்து பணிகளையும், பாராளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன் மேற்கொள்ளும்படி, நகராட்சி ஆணையாளரிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆனால் மேட்டுப்பாளையம் திமுக நகர மன்ற தலைவர், துணைத்தலைவர், திமுக நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் என்று 30க்கும் மேற்பட்டோர் தேவையில்லாமல் பிரச்சனை செய்து ஆளும் வர்க்கத்தின் உச்சமாக மக்கள் நலப்பணிகளை துவக்கக் கோரிய சட்டமன்ற உறுப்பினர் பேரிலும், அவருடன் சென்ற நகராட்சி கவுன்சிலர்கள் உட்பட 20 பேர் மீது பொய்வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த பொய் வழக்கு பதிவை ரத்து செய்ய வேண்டும்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தாலுகா, நியூஸ் 7 தொலைக்காட்சியில் செய்தியாளரை மர்ம நபர்கள் நோட்டமிட்டுள்ளனர். இது குறித்து காவல்துறை அதிகாரிக்கு தகவல் அளித்துள்ளார். ஆனால் காவல்துறையினர் மெத்தனப்போக்குடன் செயல்பட்டதுடன் உரிய பாதுகாப்பு அளிக்க தவறியுள்ளனர். இதனால் ஆறு பேர் கொண்ட கும்பல் அங்குள்ள பெட்ரோல் பங்கில் வைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்தியதுடன் அங்கிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பியோடி உள்ளனர். ஆகவே உரிய பாதுகாப்பு அளிக்க தவறிய காவல் துறையினர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் குனியமுத்தூர் பகுதி மணிகண்டன் நகர், போத்தனூர் கடைவீதி, ஆர்.எஸ்.புரம் பகுதிகளில் பெண்களிடம் நகை பறிப்பு மற்றும் பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளை சம்பவங்கள் பொது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தில் கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தங்குதடையின்றி மிகவும் எளிதாக போதை பொருட்கள் கிடைக்கின்றது. இதனால் பள்ளி, கல்லூரி மாணாக்கர்கள் மற்றும் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகின்றனர். இதனால் குற்றங்கள் அதிகரிக்கின்றது. ஆகவே கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு போதை பொருட்களின் விற்பனை, கஞ்சா வளர்ப்பை முற்றிலும் தடுக்க வேண்டும்.
கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மதுக்கரை ஆனைகட்டி, பகுதிகளிலிருந்து நமது மாவட்ட கனிமவளங்கள் நாள்தோறும் அன்டைய மாநிலமான கேரளாவிற்கு கூடுதல் எடையுடன் கடத்தப்படுகிறது. இது குறித்து, பல்வேறு தரப்பினர்களிமிருந்து புகார்கள் வரப்பெற்றும், கடத்தலை தடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.
கோவை மாவட்டத்தில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை போர்கால நடவடிக்கை மேற்க்கொண்டு சேதமடைந்த சாலைகளை செப்பனிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும், குப்பைகள் முழுமையாக அகற்றப்படாமல் தேங்கியுள்ளன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, நோய் தொற்று பரவுகிறது. மாநகராட்சி நிர்வாகம், குப்பைகளை அகற்ற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். கோவை வெள்ளலூரில் மாநகராட்சி குப்பை கிடங்கில் இருந்து சுமார் 15கி.மீ சுற்றளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அதிமுக அரசால் கோவை மாவட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட அத்திக்கடவு – அவிநாசி திட்டம், பில்லூர் 3 ம் கூட்டுக்குடிநீர் திட்டம், சீர்மிக நகர திட்டப்பணிகள், கோவை அவிநாசி ரோடு உயர்மட்ட மேம்பாலம், ஆத்துப்பாலம் உக்கடம் உயர்மட்ட மேம்பாலம், மேற்கு புறவழிச்சாலை திட்டப்பணிகள் கடந்த 30 மாதங்களாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை விரைவுபடுத்தி, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கோவை மாநகராட்சி, வெள்ளலூரில் ரூ.168 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பேருந்து நிலையப்பணிகள் 60 சதவீதம் பணிகள் முடிவடைந்த நிலையில் எவ்வித முன்னேற்றமின்றி கிடப்பில் போடப்பட்டுள்ளது. கட்டுமான பணிகளை தொடர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
குடிசை மாற்று வாரியம் மூலம் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்ததில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு கட்டண தொகை நிர்ணயிக்கப்பட்டதால், ஒதுக்கீடு பெற்றவர்கள் பணம் செலுத்த இயலாத நிலையில் குடியிருப்புகளுக்கு செல்ல இயலாமல் உள்ளனர். அரசு நிர்ணயித்த கட்டண தொகையை ரத்து செய்து பயணாளிகள் குடியேற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவை மாவட்டத்தில் அ.இ.அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு அதிகாரிகள், வேண்டுமென்றே அரசியல் காழ்புணர்ச்சியோடு, பழிவாங்கும் நடவடிக்கையாக பல்வேறு இடையூறுகளை அளித்து வருகிறது. குறிப்பாக ஊராட்சி மன்ற தலைவருக்கு குற்றச்சாட்டு குறிப்பானைகளை வழங்கி ஊராட்சி மன்ற தலைவருக்கான அதிகாரங்களை பறிக்கின்றனர். இதுபோன்ற நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தி, மக்களால் தேர்ந்தேடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள், சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்.
கோவை மாநகராட்சி மற்றும் கோவை மாவட்ட புறநகர் பகுதிகளில் போதிய அளவு குடிநீர் விநியோகம், செய்யப்படுவதில்லை. மேலும், குறிப்பிட்ட இடைவெளியில் குடிநீர் விநியோகம் செய்யாமல், 20 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே, விநியோகம் செய்யப்படுகிறது. ஆகவே மாவட்ட நிர்வாகம், தலையிட்டு சீரான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆத்துப்பாலம் முதல் மதுக்கரை செல்லும் பாலக்காடு சாலை குண்டும் குழியுமாக வாகன ஒட்டிகள் பயன்படுத்த இயலாத அளவிற்கு மோசமாக உள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலை, பழுதுபார்த்து சீர்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவைப்புதூர் – புட்டுவிக்கி வழியாக பேரூர் செல்லும் சாலை சமீபத்தில் பைப்லைன் பணிகள் முடிவடைந்து தற்போது போடப்பட்ட தார்சாலையில் பல்வேறு இடங்களில் சாலை உள்வாங்கி போக்குவரத்திற்கு பயன்படுத்த இயலாத வகையில் மிகவும் மோசமாக உள்ளது. உரிய கடும் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.” என்று கூறினார்.
கோவை மாவட்டத்தை திமுக அரசு தொடர்ந்து புறக்கணிக்கிறது – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் மனு

Leave a Reply