,

தமிழக அரசு மருத்துவமனைகளில் 1021 மருத்துவர்களுக்கான பணி நியமனங்கள் – சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் பேட்டி

m subramaniam
Spread the love
மருத்துவப் பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மருத்துவர்களுக்கான கலந்தாய்வு நேற்றும் இன்றும் நடைபெற்று வரும் நிலையில் நாளை மறுதினம் சென்னை எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து 1021 மருத்துவர்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்..

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,தமிழக அரசு மருத்துவமனைகளில் 1021 மருத்துவர்களுக்கான பணி நியமனங்கள் நடைபெற உள்ளதாகவும் அதற்காக ஏற்கனவே சான்றிதழ் சரி பார்க்கும் பணி முடிவடைந்து நேற்றும் இன்றும் கலந்தாய்வு நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் தமிழக மருத்துவத் துறை வரலாற்றில் மட்டுமல்லாது இந்திய மருத்துவத்துறை வரலாற்றில் முதன்முறையாக புதிய தேர்வாளர்களுக்கு கலந்தாய்வு என்பது இதுவே முதல் முறை என்றும் தமிழகத்தில் 20  மருத்துவ மாவட்டங்களில் எங்கே எல்லாம் அதிக காலிப்பணியிடங்கள் இருக்கிறதோ அங்கெல்லாம் இந்த மருத்துவர்களை பணியில் அமர்த்திட வேண்டும் என்ற அடிப்படையில் கவுன்சிலிங் நடத்தப்பட்டு வருகிறது என்றும் கூறியதுடன் தேர்வாகியுள்ள 1021 பேரை 20 மாவட்டங்களில் காலி பணியிடங்கள் என்று கண்டறியப்பட்டு வெளிப்படையாக காலிப்பணியிடங்கள் என அறிவிக்கப்பட்டுள்ள 1127  பணியிடங்களில் நியமிக்கும் வகையிலான கவுன்சிலிங் நடைபெற்று   நாளை மறுநாள் காலை 10 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் அவர்களுக்கான பணி அணைகள் வழங்கப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டார்.இதேபோல் மருத்துவ பணியாளர் தேர்வாணையத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்புடன் நிருத்தி வைக்கப்பட்டுள்ள மருந்தாளுனர்களுக்கான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதாகவும் அவர்கள் கொரோனா காலகட்டத்திற்கான மெரிட் மதிப்பெண்கள் கேட்டுள்ளதால் அதற்காக அஃபிடவிட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்த அவர், மருந்தாளுநர்கள் கொரோனா காலத்தில் வெளியில் இருந்து பணியாற்றாதவர்கள் என்பதால் இவர்களுக்கு மெரிட் மதிப்பெண் கொடுத்தால் அது அநீதியாக மாறிவிடும் என்பதற்காகவே  நீதிமன்றத்தில் அஃபிடவிட்  தாக்கல் செய்யப்பட்டுள்ள ழூழலில் அப்பிரச்சினை முடிந்தவுடன் இதற்கான  பட்டியலும் வெளியிடப்படும் என்றும் சுட்டிக்காட்டினார்.