கோவை ஆர்.எஸ்.புரத்தில் ரூ.9.67 கோடியில் சர்வதேச தர ஹாக்கி மைதானம் திறப்பு

Spread the love
கோவை மாநகராட்சி சார்பில் ரூ.9.67 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அதிநவீன சர்வதேச ஹாக்கி மைதானத்தை தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று ஆர்.எஸ்.புரத்தில் நேரில் திறந்து வைத்தார்.

சுமார் 6,500 சதுர மீட்டர் பரப்பளவில் சர்வதேச தரத்திற்கு இணையாக உருவாக்கப்பட்டுள்ள இந்த மைதானத்தில், இரவு நேர போட்டிகளுக்காக தலா 500 வாட்ஸ் திறன் கொண்ட 20 எல்.இ.டி விளக்குகளுடன் கூடிய 6 மின்கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புக்காக உறுதியான கம்பிவேலிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், வீரர்–வீராங்கனைகளுக்கு தனித்தனி உடை மாற்றும் அறைகள், ஓய்வறைகள் மற்றும் நவீன கழிப்பறை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

மேலும், மைதான பராமரிப்புக்குத் தேவையான தடையற்ற நீர் வசதிக்காக பிரத்யேக நீர்த்தேக்கத் தொட்டியும் அமைக்கப்பட்டுள்ளது. திறப்பு விழாவின்போது, துணை முதலமைச்சர் சிறிது நேரம் ஆக்கி விளையாடி வீரர்களை உற்சாகப்படுத்தினார். விளையாட்டுத் துறைக்கு தமிழக அரசு அளிக்கும் முக்கியத்துவத்தின் வெளிப்பாடாக இந்த மைதானம் விளங்குகிறது என விளையாட்டு ஆர்வலர்கள் பாராட்டினர்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற அரசு விழாவில், பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 10,000 பயனாளிகளுக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை துணை முதலமைச்சர் வழங்கினார்.