கோவையில் பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகள் குறித்து பா.ஜ.க-க்கு நன்றாகத் தெரியும் என தெரிவித்தார். சிலர் புதிதாக அரசியலுக்கு வந்து கோவையை “மஞ்சள் நகரம்” என புதிதாக கண்டுபிடித்து பேசுவது வேடிக்கையாக உள்ளது என்றும், மஞ்சளுக்கென தனி வாரியம் அமைத்ததே பா.ஜ.க என்பதையும் நினைவூட்டினார்.
பா.ஜ.க – அ.தி.மு.க கூட்டணி தற்போது மிகவும் வலுவாக இருப்பதாகக் கூறிய அவர், தி.மு.க ஆட்சியில் மக்களின் குரல் வளை நெரிக்கப்படுவதாக கடுமையாக விமர்சித்தார். திருப்பரங்குன்றம் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், அதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு கண்டிப்பாக பதில் சொல்லியே ஆக வேண்டும் என்றார். அந்த விவகாரத்தில் நீதிபதியின் மீதே குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தார்.
இந்துக்களின் உணர்வுகள் தொடர்ந்து புண்படுத்தப்படுகின்றன என்றும், இதற்கான பதில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் கிடைக்கும் என்றும் அவர் கூறினார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு ஈகோ பிரச்சனை இருப்பதாகவும் விமர்சித்தார்.
நடிகர் விஜய் குறித்து பேசிய தமிழிசை சவுந்தரராஜன், “விஜய் டிக்கெட் வாங்கித்தான் மக்கள் தொடர்பை உருவாக்கி இருக்கிறார். அவரது தி.மு.க எதிர்ப்பை நான் வரவேற்கிறேன்” என்றார். தி.மு.க எத்தனை இடங்களுக்கு காந்தி பெயரை வைத்துள்ளது என்றும் கேள்வி எழுப்பிய அவர், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் அதிக ஊழல் நடந்த மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று என குற்றம்சாட்டினார்.
மேலும், “உதயநிதி ஸ்டாலின் என்ன புரிந்து கொண்டுள்ளார்? எத்தனை விமான நிலையங்கள், துறைமுகங்கள், சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன என்பது அவருக்கு தெரியுமா?” என கேள்வி எழுப்பினார்.
2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கையை தெரிவித்த அவர், “தி.மு.க ஒரு தீய சக்தி என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. அந்த நிலையை விஜய்யும் சொல்ல வேண்டிய சூழல் தற்போது உருவாகியுள்ளது” என தெரிவித்தார்.



Leave a Reply