கோவை மேட்டுப்பாளையம் அருகே உள்ள தாசம்பாளையத்தை சேர்ந்த நாட்டுப்புற நடன கலைஞர் பத்திரப்பன்(87). இவர் தமிழகத்தின் பாரம்பரிய கிராமிய நடன கலையான வள்ளி கும்மி ஆட்ட ஆசானாக உள்ளார். அழிந்து வரும் இந்த நடன கலையை இன்றைய தலைமுறையிடம் கொண்டு சேர்க்கும் விதமாக பலருக்கும் இதனை தொடர்ந்து கற்று தருகிறார்.
இவரிடம் பயின்ற பலரும் வள்ளி கும்மி நடன கலைஞர்களாக இருந்து வருகின்றனர். தள்ளாத வயதிலும் தளராமல் இந்த கிராமிய கலையை தொடர்ந்து ஊக்குவித்து வந்த பத்திரப்பனுக்கு தற்போது மத்திய அரசு பத்ம விருது அறிவித்து அவரை கவுரவப்படுத்தி உள்ளது.
இந்த தகவல் அறிந்ததும், கோவை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தாசம்பாளையம் பத்திரப்பனின் இல்லத்திற்கு நேரில் சென்று அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிலையில் மக்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கோவை மாவட்டத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் இருப்பதாக சமூக வலைத்தளங்களிலும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே போல் மேட்டுப்பாளையத்தில் உள்ள தேக்கப்பட்டி இயற்கை வேளாண் விவசாயி பாப்பம்மாள் என்ற நூறு வயதை கடந்த மூதாட்டிக்கு பத்ம ஸ்ரீ விருது இந்திய
குடியரசு தலைவரால் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது கோவை மாவட்டத்தைச்சேர்ந்த பத்திரப்பனுக்கு விருது அறிவிக்கப்பட்டதன் மூலம் குறுகிய காலத்தில் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த இருவர் பத்ம ஸ்ரீ பட்டம் பெற்றுள்ளனர்.
தமக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டு இருப்பது குறித்து பத்தரப்பன் கூறுகையில், விருதுகள் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கும்மியாட்ட கலையை பழகவில்லை.
அதன் மீது தீராத ஆர்வம் இருந்ததால், அதற்கான வாய்ப்பு ஏற்பட்டதால் கும்மியாட்டக் கலையை ஊர் முழுவதும் கொண்டு செல்கிறேன். கிராமபுரத்தைச் சேர்ந்தவனுக்கு உயரிய விருது கொடுக்க முன் வந்திருக்கும் மத்திய அரசுக்கு நன்றிகள் என பெருமிதத்துடன் குறிப்பிட்டார் பத்திரப்பன்.
கும்மியாட்டத்தின் மீது தீராத காதல் – பத்ம ஸ்ரீ பத்தரப்பன்

Leave a Reply