இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக, அவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 30 மீனவர்களும், காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 17 மீனவர்களும் உட்பட மொத்தம் 47 மீனவர்கள் மற்றும் ஐந்து இந்திய மீன்பிடிப் படகுகள் இன்று (09.10.2025) அதிகாலை இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மீனவர்கள் கைது சம்பவம் மீண்டும் மீண்டும் நிகழ்வது கடலோர மக்களிடையே அச்சத்தையும் நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்துவதாகவும், இந்நிலையில் இலங்கைக் காவலில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களையும் அவர்களது படகுகளுடன் உடனடியாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க தூதரக நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், இந்தியா–இலங்கை கூட்டுப்பணிக் குழுவை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரவும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன், இவ்வாறான கைது சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நடைபெறுவது நமது மீனவர்களின் பாதுகாப்பும் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாக்கும் வகையில் உள்ளது என்றும், அவர்கள் தங்கள் பாரம்பரிய தொழிலைத் தொடர்வதில் உள்ள மன உறுதியையும் நம்பிக்கையையும் கடுமையாக பாதிக்கிறது என்றும் முதலமைச்சர் தனது கடிதத்தில் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது, தமிழ்நாட்டைச் சேர்ந்த 242 மீன்பிடிப் படகுகளும் 74 மீனவர்களும் இலங்கைக் காவலில் உள்ளனர் என்றும், நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு உடனடியாக தலையிட்டு சிறைபிடிக்கப்பட்டவர்களை விரைவாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.



Leave a Reply