கோவை டவுன்ஹாலில் வணிக வளாகத்தில் தீ விபத்து பரபரப்பு

Spread the love

கோவை டவுன்ஹால் பகுதி நகரின் முக்கிய வணிக மையமாக திகழ்கிறது. ஜவுளிக்கடைகள், வணிக வளாகங்கள், சிற்றுக் கடைகள் என ஏராளமான வணிகங்கள் இங்கு செயல்பட்டு வருகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்டம் முழுவதும் மற்றும் வெளியூரிலிருந்தும் வந்து பொருட்கள், ஆடைகள் வாங்கிச் செல்கின்றனர். தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் தற்போது வாடிக்கையாளர்கள் அதிக அளவில் வரத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், இன்று விடுமுறை நாளாக இருந்ததால், அப்பகுதியில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது ஒப்பணக்கார வீதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் செயல்படும் ‘சிம்கோ’ கடையின் மேல் தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் கிடைத்தவுடன் கோவை மத்திய தீயணைப்புத் துறை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டது. தீ தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும், காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்ததால், வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே பரபரப்பு நிலவியது.