தமிழக அரசின் எரிசக்தித் துறை முதன்மைச் செயலர் பீலா வெங்கடேசன் (56) உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இரவு காலமானார். அவரது உடல் சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இன்று காலை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று அவரது உடலுக்கு மலரஞ்சலி செலுத்தினார். அப்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என். நேரு, மா. சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
இதனையடுத்து, காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன், மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் அமுதா, ராதாகிருஷ்ணன், ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட பலரும் பீலா வெங்கடேசனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பீலா வெங்கடேசன் 1997-ஆம் ஆண்டு பிகார் மாநிலக் குழுவில் இருந்து குடிமைப் பணியில் தேர்ச்சி பெற்றார். போஜ்பூர் மாவட்டத்தில் உதவி ஆட்சியராக தனது பணியைத் தொடங்கிய அவர், மணவாழ்க்கை காரணமாக தமிழ்நாடு மாநிலக் குழுவுக்கு மாறினார். பின்னர் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றியதோடு, சுகாதாரம், வணிகவரி, கைத்தறி மற்றும் துணிநூல் துறைகளின் செயலராகவும் பொறுப்பு வகித்தார்.
கொரோனா காலத்தில் சுகாதாரத் துறைச் செயலராக பணியாற்றிய அவர், தற்போது எரிசக்தித் துறை முதன்மைச் செயலராகப் பணியாற்றி வந்தார். கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையிலும், இல்லத்திலும் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், அவர் காலமானது பொதுமக்களையும், அதிகாரிகளையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.



Leave a Reply