கோவை மக்களின் பிரச்சனைகள் குறித்து மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

Spread the love

கோவை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வேலுமணி, கோவை மாவட்ட மக்களை பாதிக்கும் முக்கிய பிரச்சனைகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

அதில், கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நிறுத்தப்பட்டுள்ள திறந்த இருதய அறுவை சிகிச்சையை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளார். திருப்பூர், நீலகிரி, பாலக்காடு உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர் என்பதால், ஏழை மற்றும் தொழிலாளர் மக்களுக்கு இது மிக அவசியமான சேவையாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், குடிநீர், பாதாளச் சாக்கடை கட்டணம் மற்றும் வைப்புத்தொகை அதிகரிப்பு பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் என்றும், ட்ரோன் சர்வே அடிப்படையில் விதிக்கப்பட்டுள்ள சொத்து வரி கூடுதல் திரும்ப பெறப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

வெள்ளலூர் குப்பை கிடங்கு பிரச்சனை குறித்து, வெளியூரிலிருந்து குப்பை கொண்டு வருவதால் சுற்றுப்புற மக்கள் பாதிக்கப்பட்டு நோய்த்தொற்று அபாயம் அதிகரித்து வருவதாகவும், உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அதேபோல், குடிநீர் விநியோகம் சீராக இல்லாதது, போதுமான அளவு நீர் இருந்தாலும் 4–5 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே வழங்கப்படுவது குறித்து குற்றம்சாட்டினார். மேலும், 24×7 குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை மற்றும் கேஸ் பைப் லைன் பணிகள் காரணமாக சாலைகள் மோசமான நிலையில் உள்ளன; அவற்றை விரைந்து சீரமைக்க வேண்டும் என்றும் கோரினார்.

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வெள்ளலூரில் தொடங்கிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையப் பணிகள் மீண்டும் துவங்கப்பட வேண்டும் என்றும், நீர்நிலைகளில் ஆகாயத்தாமரை மற்றும் கழிவுநீர் கலப்பை அகற்ற சீரான பராமரிப்பு தேவை என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மதுக்கரை மரப்பாலம் பணிகள் மந்தமாக உள்ளதால் விரைந்து நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், ஆனைமலை ஒன்றியத்தில் கம்பாளப்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டம், பில்லூர் மூன்றாவது குடிநீர் திட்டம், SIHS காலனி ரயில்வே மேம்பாலம் உள்ளிட்ட பணிகள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

மேலும், விவசாயிகள் தங்கள் நிலங்களில் சொந்த பயன்பாட்டிற்காக மண் எடுத்துக்கொண்டதற்காக விதிக்கப்பட்ட அபராதங்கள், வழக்குகள் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் வாழ்வை நேரடியாக பாதிக்கும் அடிப்படை வசதிகள் மற்றும் வளர்ச்சி திட்டங்களில் ஏற்பட்டுள்ள சுணக்கம் நீங்கி, அவற்றை விரைந்து செயல்படுத்த வேண்டும் என தனது மனுவில் எம்.எல்.ஏ. எஸ்.பி. வேலுமணி வலியுறுத்தியுள்ளார்.