தமிழ் சினிமாவில் அதிரடி நாயகனாகவும், கோடிக்கணக்கான மக்களால் கேப்டன் எனவும் அன்போடு அழைக்கப்பட்டவர் விஜயகாந்த். இவரின் மறைவு இன்று வரை தமிழக மக்களாலும், திரையுலகினராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயங்களில் ஒன்றாகிவிட்டது. மறைந்த அரசியல் தலைவர் கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாள் ஆகஸ்ட் 25 அன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அவரது திரையுலக பயணத்தின் மைல்கல் திரைப்படமான கேப்டன் பிரபாகரன் திரைப்படம் மீண்டும் புதுப்பொலிவுடன் திரையிடப்பட்டது.
ஆகஸ்ட் 22ஆம் தேதியான இன்று தமிழ்நாடு முழுவதும் 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இப்படம் மறுவெளியீடு செய்யப்பட்டது. இன்றைய தலைமுறை ரசிகர்களும் ரசிக்கும் வகையில் நவீன 4K தொழில்நுட்பம் கொண்டு டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்ட இப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி பகுதியில் கேப்டன் பிரபாகரன் படத்தின் மறுவெளியீட்டில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தை திரையில் கண்டதும் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் மற்றும் மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் கண்ணீர் விட்டு கதறி அழுத காட்சி இணையத்தில் வெளியாகி காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.
கடந்த 1991 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு நாளில் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் வெளியான கேப்டன் பிரபாகரன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி கண்டது. இப்படத்திற்கு பின்னரே விஜயகாந்த் மக்கள் மத்தியில் கேப்டன் எனவும் அறியப்பட்டார். இந்த கேப்டன் பொறுப்பு வாழ்நாள் முழுவதும் நீடித்திருந்தது. இளையராஜாவின் இசையில் விஜயகாந்துடன் சரத்குமார், ரூபினி, ரம்யா கிருஷ்ணன், மன்சூர் அலிகான் உட்பட பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர்.



Leave a Reply