டெல்லியில் நடைபயிற்சிக்கிடையே காங்கிரஸ் எம்.பி. சுதாவின் தங்கச் செயின் பறிப்பு – பரபரப்பு சம்பவம்!

Spread the love

நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி. சுதா டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் தங்கி இருக்கிறார். இன்று (ஆகஸ்ட் 4) காலை 6 மணியளவில் திமுக எம்.பி. சல்மாவுடன் சேர்ந்து நடைபயிற்சி மேற்கொண்டபோது, ஒரு மர்ம நபர் திடீரென அவர் கழுத்திலிருந்த 4.5 சவரன் தங்கச் செயினை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் செக் தூதரகத்துக்கு அருகே நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. ஹெல்மெட் அணிந்த நபர், ஸ்கூட்டரில் வந்த அவர் செயினைப் பறித்துவிட்டு தப்பியோடியுள்ளார். இந்த தாக்குதலின்போது சுதாவின் கழுத்தில் லேசான காயமும் ஏற்பட்டுள்ளது.

சானக்யபுரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் போலீசாரால் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. மேலும், உள்துறை அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில், குற்றவாளியை விரைந்து கைது செய்யக்கோரி சுதா வலியுறுத்தியுள்ளார்.

இது ஒரு உயர் பாதுகாப்பு மண்டலமாக இருக்கும் பகுதி என்பதால், இந்தச் செயின் பறிப்பு சம்பவம் போலீசாரிடையே அதிர்ச்சியையும் சிக்கலையும் ஏற்படுத்தியுள்ளது. ஏராளமான வெளிநாட்டு தூதரகங்கள் உள்ள இடத்தில், ஒரு எம்.பி.யிடம் இவ்வாறான சம்பவம் நடப்பது சமூகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.