திருச்சியிலிருந்து கோவை நோக்கி 30 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த நியூகோ நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஆம்னி பேருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3:30 மணியளவில் விபத்துக்குள்ளானது. கருமத்தம்பட்டி அருகே உள்ள சென்னி ஆண்டவர் கோயில் அருகே, தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தின் தடுப்புச் சுவரில் பேருந்து மோதியது.
விபத்தைத் தொடர்ந்து பேருந்தில் இருந்து புகை கிளம்பத் தொடங்கியது. இதைப் பார்த்த ஓட்டுநரும் நடத்துநரும் துடுக்குடன் செயல்பட்டு, உள்ளிருந்த பயணிகளை உடனடியாக பாதுகாப்பாக பேருந்தில் இருந்து கீழே இறக்கினர்.
அதன் சில நிமிடங்களில், பேருந்தின் பேட்டரியில் தீ விபத்து ஏற்பட்டு மளமளவென முழு பேருந்தும் தீக்கிரையாயிற்று. தகவல் தெரிவிக்கப்பட்டதன் பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தினர்.
இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது ஆறுதலளிக்கும் விடயமாகும். பின்னர், பயணிகள் அனைவரும் மாற்று பேருந்தில் கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தற்போது கருமத்தம்பட்டி காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a Reply