1975-ல் இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட நெருக்கடி நிலை (Emergency) இன்று 50 ஆண்டுகளை முடித்ததை நினைவுகூரும் வகையில், கோவை பீளமேட்டில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தில் புகைப்படக் கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் கலந்துகொண்டு கண்காட்சியை பார்வையிட்டு, பின்னர் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
“1975 ஜூன் 25 அன்று முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நெருக்கடி நிலையை அமல்படுத்தினார். அது ஜனநாயகத்திற்கு எதிரான பெரிய நடவடிக்கை. இன்றைய இளைஞர்களுக்கு அந்த வரலாற்றை தெரியப்படுத்தும் நோக்கத்தில் இந்த நிகழ்வு நடத்தப்படுகிறது.
நெருக்கடி நிலை காலத்தில் தி.மு.க.வினர் உட்பட பலர் கைது செய்யப்பட்டு கொடுமைகளை சந்தித்தனர். ஆனால் இன்றைக்கு அதே தி.மு.க. தான் காங்கிரசுடன் கூட்டணி வைத்துள்ளது. இதுவரை காங்கிரஸ் கட்சி மக்கள் மன்னிப்புக் கேட்கவில்லை. இதுபோன்ற நிலைகள் மீண்டும் ஏற்படக்கூடாது என்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்.”
மேலும், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், திருப்பூரில் ஒருவர் இன்று கொலை செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டார். “தமிழகத்தில் இன்று ஒரு வகையான நெருக்கடி நிலை இருப்பது போலவே தோன்றுகிறது,” என்றார்.
தேசிய கல்விக் கொள்கை குறித்த கேள்விக்கு பதிலளித்த வானதி சீனிவாசன், “இந்தக் கொள்கை நாடு முழுவதும் கருத்து கேட்டு அமுல்படுத்தப்பட்டது. கல்வியில் அரசியல் செய்யும் தி.மு.க. அரசு அதன் தோல்விகளை மறைக்க மத்திய அரசை குறை கூறுகிறது,” என்றார்.
அதிமுக-பாஜக கூட்டணி குறித்து அவர், “முருக பக்தர் மாநாடு போன்ற நிகழ்வுகள் எங்கள் கூட்டணியில் பிரச்சனையை ஏற்படுத்தவில்லை. எங்கள் கூட்டணி உறுதியுடன் இருக்கிறது. அமித்ஷா ஏற்கனவே தெளிவாக சொல்லிவிட்டார் – தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுக தலைமையே,” என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாவட்ட தலைவர் ரமேஷ் குமார், எஸ்.ஆர். சேகர், வீர தமிழச்சி சரஸ்வதி, உமாதேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Leave a Reply