கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் துடியலூருக்கு உட்பட்ட 24 வீரபாண்டி, மேல்பதி, கீழ்பதி, வீரபாண்டிபுதூர் ஆகிய இடங்களில் 03.03.2024 முதல் 09.03.2024 வரை 7 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் ரூ.8 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டுநலப்பணித்திட்டத்தின் மூலமாக 24 வீரபாண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு ரூ.4இலட்சம் மதிப்பில் ஸ்மாட் வகுப்பறைக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டது. பள்ளி வளாகத் தூய்மைப்பணி, நூலகத்திற்கு 3000 புத்தகங்கள் வழங்குதல், வர்ணம் பூசுதல், சுவர் சித்திரங்கள் வரைதல் ஆகியவற்றுக்காக ரூ.4இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட பணிகள் மேற்கோள்ளப்பட்டன. மேலும், 24 வீரபாண்டி, மேல்பதி, கீழ்பதி, வீரபாண்டிபுதூர் ஆகிய பகுதிகளைச் சுற்றியுள்ள கிராமங்களில் 200 – க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.
சிறப்பு முகாமில் டெங்கு, கொரோனா விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெற்றன. இலவச கண் சிகிச்சை முகாம், இலவச பல் மருத்துவ முகாம், இலவச கால்நடை மருத்துவ முகாம்கள் மூலம் 24வீரபாண்டியைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர்.
பள்ளி தலைமை ஆசிரியர் திரு.சுவாமிநாதன், ஊராட்சி மன்றத் தலைவர் பழனிசாமி ஆகியோர் நலத்திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதற்கான பாராட்டுச் சான்றிதழை கல்லூரியின் முதல்வரிடம் வழங்கினா்.
சிறப்பு முகாம் நிறைவு விழாவிற்குக் கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் தலைமை வகித்தார். ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் செ.பிரகதீஷ்வரன் வரவேற்றார். இந்திய அரசின் தமிழ்நாடு, பாண்டிச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகளின் நாட்டுநலப்பணித்திட்ட மண்டல இயக்குநர் ஒய்.எம்.உப்பின், மாநில நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் எம்.செந்தில்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று சிறப்பித்தனர். கல்லூரியின் நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் ஆர்.நாகராஜன் முகாம் அறிக்கை வாசித்தார்.
பெரியநாயக்கன்பாளையம் தொகுதி கல்வி அலுவலர் சி.இராஜம்மாள், 24 வீரபாண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுவாமிநாதன், இந்திய அரசின் எச்.ஜி.எஸ் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியின் மாநிலத் தலைவர் முனைவர் கே.விஜயராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முடிவில் முனைவர் யூ.பிரவின்குமார் நன்றி கூறினார். விழாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் துணை முதல்வர், பல்வேறு துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், ஊர்பொதுமக்கள், நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். மாணவ, மாணவிகளின் சமூகப் பணியை பள்ளி ஆசிரியர்களும், ஊர் பொதுமக்களும் வெகுவாகப் பாராட்டி வாழ்த்தினர்.
ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் செ.பிரகதீஷ்வரன், அ.சுபாஷினி, முனைவர் ஆர்.நாகராஜன், முனைவர் யூ.பிரவின்குமார், முனைவர் ஆ.சஹானா பாத்திமா ஆகியோர் சிறப்பு முகாமை மிகச் சிறப்பாக ஒருங்கிணைந்திருந்தனர்.
Leave a Reply