,

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் இருதய ஆரோக்கியம் சிகிச்சைகள் குறித்த கண்காட்சி  

sri ramakrishna hospital
Spread the love

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை இருதய ஆரோக்கியம்  மற்றும் சிகிச்சைகள்  குறித்த  மாபெரும்  கண்காட்சியை  துவக்கியது.

வளர்ந்து வரும் தலைமுறையினருக்கு இருதய ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை  எடுத்துரைக்க  ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை இருதய ஆரோக்கியம் குறித்த  கண்காட்சியை துவக்கியது . இதன் முக்கிய நோக்கம்  பொதுமக்கள் அனைவருக்கும் இருதய ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும். இந்த இருதயவியல் கண்காட்சியை செப்டம்பர் 21 அன்று  புரூக்பீல்ட்ஸ்மாலில் கோவை மாவட்ட ஆட்சியர்,  கிராந்தி குமார் பதி,  எஸ். என். ஆர் சன்ஸ் சாரிட்டபிள் டிரஸ்ட்  தலைமை நிர்வாக அதிகாரி சி.வி. ராம்குமார், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை  மருத்துவ இயக்குனர் டாக்டர் எஸ். ராஜகோபால் , மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் எஸ்.அழகப்பன் ஆகியோர் முன்னிலையில் துவக்கி வைத்தார். மேலும் மருத்துவமனையின்  இருதயவியல்  மற்றும் இருதய அறுவை சிகிச்சை துறையின் மருத்துவர்கள் கண்காட்சியை வழிநடத்தினர்

இக்கண்காட்சியில் இருதயத்தின் அமைப்பு மற்றும் செயல்பாட்டை விளக்கும் வகையில்  மாதிரி இருதயத்தின்  உடற்கூறியல் இடம்  பெற்றிருந்தது.  இந்த, மாதிரி இருதயம், பார்வையாளர்களுக்கு இருதய செயல்பாடு  மற்றும் இருதய ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தது. கண்காட்சியின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றான  இதயத்தில் ஸ்டென்ட்  எவ்வாறு பொருத்தப்படும் , இதயத்தில் உள்ள அடைப்புகளுக்கு  எவ்வாறு சிகிச்சையளிக்கப்படுகின்றன என்பது தெளிவாக விளக்கப்பட்டது. கூடுதலாக, பேஸ்மேக்கர் குறித்த காட்சியும் இடம்  பெற்றிருந்தது. இந்த உயிர்க்காக்கும் கருவிகள் எவ்வாறு உடலில் பொருத்தப்பட்டு  செயல்படுகின்றன மேலும் சீரற்ற  இதய துடிப்புகளை  இக்கருவிகள் மூலம்  சீராக வைத்திருப்பதை பற்றியும்  ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை இன்ஸ்டிடியூட் ஆப் அலையட் ஹெல்த் சயின்ஸ் கல்லூரி மாணவர்கள் விரிவாக   விளக்கினார்கள்.

அதே நேரத்தில் குழந்தைகளுக்கான  இருதயவியல், சிறப்பு இருதய அறுவை சிகிச்சைகள் மற்றும் எலெக்ட்ரோபிசியாலஜி, லேசர் கரோனரி ஆன்ஜியோபிளாஸ்ட்டி  குறித்த புதிய முன்னேற்றங்கள் பற்றிய விவரங்களும் காணொளிகளின் மூலம் காட்சிப்படுத்தப்பட்டது.

இக்கண்காட்சியில் நேரடியாக சிபிஆர் செயல்விளக்கம் பொதுமக்களுக்கு செய்து காண்பிக்கப்பட்டது.  மேலும் மருத்துவமனையின்  ஊட்டச்சத்து  நிபுணர்கள், இருதய நோய்களைத் தவிர்க்க உதவும் ஆரோக்கியமான உணவுகள் மற்றும் வாழ்க்கை முறைகள் பற்றிய முக்கிய குறிப்புகளை பொதுமக்களுக்கு வழங்கினர். இக்கண்காட்சி செப்டம்பர் 22 வரை  நடைபெறும் என கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.