ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி ஒருங்கிணைப்பு விழா

Spread the love

கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவியருக்கான ஒருங்கிணைப்பு விழா நடைபெற்றது.

எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் திரு.எஸ்.நரேந்திரன் அவர்கள் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிப் பேசும்போது, கல்லூரி வாழ்வில் அடியெடுத்து வைக்கும் மாணவ சமுதாயம்தான் நாளைய சமூகத்தின் நம்பிக்கை நட்சத்திரங்கள் என்று குறிப்பிட்டார். மேலும் மாணவிகள் கல்வி, ஆராய்ச்சி, கலை மற்றும் சமூக சேவையில் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும். வாழ்வியல் மதிப்புகளோடு, மாற்றங்களுக்கேற்பத் தங்களை தகவமைத்துக் கொள்ளுதல் மற்றும் உலகளாவிய சிந்தனையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

மேடைப்பேச்சாளர் திருமதி. பாரதி பாஸ்கர் அவர்கள் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, கல்லூரி வாழ்க்கையைத் தனிப்பட்ட வளர்ச்சிக்கான ஒரு தொடக்கப்பாதையாக மாணவர்கள் பார்க்க வேண்டும் என்றும் மனப்பாடம் செய்வதை விட ஆர்வம், இரக்கம் மற்றும் மற்றவர்களுடனான ஒத்துழைப்பிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறி மாணவிகளுக்கு ஊக்கமளித்துப் பேசினார்.

முன்னதாகக் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் டி.பத்மாவதி அவர்கள் அனைவரையும் வரவேற்றுக் கல்லூரியின் சிறப்புகளை எடுத்துரைத்தார். மாணவிகள் அர்ப்பணிப்புடன் தங்களுக்கான இலக்குகளை நிர்ணயிக்கவும் அதற்காகத் தொடர்ந்து முயற்சிக்கவும் வாழ்த்தினார்.
முதலாண்டு மாணவிகள் தங்கள் வாழ்வில் செழிப்படைவதோடு பயன்தரும் வாழ்வு வாழ வேண்டும் என்பதைக் குறிக்கும் வகையில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. கல்லூரியின் ஹெல்த் கிளப் சார்பில் ஸ்ரீ இராமகிருஷ்ணா மருத்துவமனை மூலம் பார்வையாளர்களுக்கு இலவச மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன.