ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி 38-வது ஆண்டு விழா கொண்டாட்டம்

Spread the love

எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் கீழ், கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 38-வது ஆண்டு விழா, கல்லூரி வளாகத்தில் இன்று (27.03.2025) கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர் விழாவிற்குத் தலைமை வகித்தார். ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் வரவேற்றுப் பேசி, பின்னர் ஆண்டறிக்கை வாசித்தார்.
விழாவிற்குச் சிறப்பு விருந்தினராகக் கோவை மதுக்கரை 35 ஃபீல்டு ரெஜிமென்ட் கமாண்டிங் ஆபீசர் கர்னல் ஸ்ரீதர் ராஜன் கலந்து கொண்டு “எஸ்.ஆர்.சி.ஏ.எஸ். பல்ஸ்” (SRCAS-Pulse) என்ற கல்லூரி மலரை வெளியிட்டார். பின்னர் அவர் பேசும்போது, “வாழ்க்கையில் உயர்ந்த இலக்கை அடைய, பத்து பண்புகள் மிகவும் அவசியம். நாம் சரியான குறிக்கோளைத் தேர்வு செய்து, அதை நோக்கிப் பயணிக்க வேண்டும். நமக்கு எது தேவை என்பதை அறிந்து கொண்டு, அதில் கவனம் செலுத்த வேண்டும். நம்முடைய வாழ்க்கையை நேசித்து வாழ வேண்டும். நம்முடைய வாழ்க்கையும், பணியும் ரயில் தண்டவாளம் போன்றது. இரண்டையும் சரியாக கையாள வேண்டும். நேர்மை, நாணயத்துடன் வாழ வேண்டும். வாழ்க்கையில் எதுவும் எளிமை கிடையாது. தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். எல்லாவற்றையும் எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டும். தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும்” என்றார்.
அதைத்தொடர்ந்து கல்வி, தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம், விளையாட்டு மற்றும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய 104 மாணவ, மாணவிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இளநிலை பட்டப்படிப்பில் சிறந்த மாணவராக, பிஎஸ்.சி., சி.எஸ்.டி.ஏ. மாணவர் ஜெ.பரத்கண்ணா, முதுநிலை பட்டப்படிப்பில் மேலாண்மைத்துறை மாணவர் என்.ரோகேஷ் ஆகியோர் சிறந்த மாணவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. முடிவில் துணை முதல்வர் முனைவர் எஸ்.பூங்குழலி நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *