​ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

Spread the love

எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் கீழ், கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 33-வது பட்டமளிப்பு விழா, கல்லூரி கலையரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.

எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் ஆர். சுந்தர் தலைமை வகித்தார். ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் பி.எல்.சிவக்குமார் வரவேற்றுப் பேசினார். தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, சிறப்பு விருந்தினராகக் கலந்துக் கொண்டு,படிப்பில் சிறந்து விளங்கி ரேங்க் பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் 1,488 இளநிலை, 248 முதுநிலை பட்டப்படிப்புகளில் தேர்ச்சி பெற்ற 1,736 பேருக்குப் பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது, “இன்றைய தினம் மாணவர்களாக இருந்த நீங்கள் பட்டதாரிகளாக மாறிய தினம். அறிவாற்றல் என்பது புத்தகங்களில் இருந்து பெறுவது மட்டுமல்ல, வெளியுலகில் இருந்தும் பெறுவதாகும். நீங்கள் எந்த துறையாக இருந்தாலும் அதில் இருந்து கற்றுக்கொள்ள ஏராளமான விஷயங்கள் உள்ளன.

ஒருவருக்கு பணி எவ்வளவு முக்கியமானதோ, அந்த அளவுக்கு கல்வியும் முக்கியமானது. கற்றல் என்பது வாழ்க்கை முழுவதுக்குமான தொடர் நிகழ்வு. இது புத்தகங்கள், மனிதர்கள், சமுதாயத்தில் இருந்து அறிந்து கொள்வதையும் குறிக்கும். நம்முடைய வாழ்வில் ஒழுக்கம் மிக மிக முக்கியம். இதில் அக ஒழுக்கம் மிகவும் முக்கியம். புற ஒழுக்கம் செயற்கையானது. வாழ்வியல் திறன் ஒவ்வொருவரையும் நல்வழிப்படுத்த கூடியது. கடின உழைப்பு, விவேகம், தன்னம்பிக்கை, சுயஊக்கம், தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளுதல், சமயோஜித அறிவு, தைரியமாக பிரச்சினைகளை எதிர்கொள்ளுதல், நேரத்தை நிர்வகித்தல், கவனம் செலுத்துதல், தொடர்பு கொள்ளும் அறிவு போன்றவை நம்மை வெற்றியாளர்களாக மாற்றும் பண்புகளாகும்.” என்று கூறினார்.

விழாவில், கல்லூரி துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.