கோவை மாநகராட்சி விக்டோரியா ஹாலில் மாமன்ற அவசர கூட்டம் மேயர் கல்பனா ஆனந்த்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டம் துவங்குவதற்கு முன்பாக, கோவை மாநகராட்சி அதிமுக கவுன்சிலர்கள் பிரபாகரன், சர்மிளா, ரமேஷ் ஆகிய மூவரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், வ.உ.சி பூங்கா வேண்டுமென வலியுறுத்தியும் விக்டோரியா ஹால் முன்பு முழக்கங்களை எழுப்பியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக கவுன்சிலர் பிரபாகரன், “செம்மொழி பூங்கா விற்கு 200 கோடி ரூபாய் அறிவித்த நிலையில், தற்போது பூங்கா அமைக்க அவசர கதியில் தீர்மானத்தை கொண்டு வந்து அவசர கூட்டம் நடைபெறுகிறது. ஏற்கனவே பூங்கா இடங்களில் கட்டிடங்கள் கட்ட கூடாது என தமிழகத்தில் அறிவிப்புகள் இருக்கின்ற நேரத்தில், கோவை மக்கள் பயன்பாட்டிற்காக பூங்கா அமைக்க போகிறோம் என கூறுகின்றனர். கோவை மக்களுக்கு இது தேவையா?
இந்த 47 ஏக்கரில் கூட்டரங்கம் அமைப்பதற்கு பதிலாக உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கலாம். அதைவிடுத்து கூட்டரங்கம் அமைப்பது காசை வீணடிக்கும் செயல். சென்னை வண்டலூருக்கு அடுத்தபடியாக கோவையில் தான் உயிரியல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது அந்த வ.உ.சி பூங்காவும் மூடப்பட்டுள்ளது. மேலும் கோவை மாநகராட்சி மேல் பல்வேறு இடங்களில் செம்மொழிப் பூங்கா என்ற பெயரில் பார்க் அமைக்கப்பட்டுள்ளது. அந்த பூங்காவிற்கு பேரறிஞர் அண்ணா அல்லது அப்துல் கலாம் ஆகியோரின் பெயர்களை வைத்தால் அவர்களை கௌரவிப்பது போன்று இருக்கும்” என தெரிவித்தார்.
Leave a Reply