கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமம் வேங்கை வயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்தது
முதலில் காவல்துறை விசாரித்து வந்த நிலையில் சிபிசிஐடி வசம் வழக்கு ஒப்படைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் நடைபெற்று 2 ஆண்டுக்கு மேல் ஆகியும் முதல் தகவல் அறிக்கை மட்டுமே சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் தாக்கல் செய்யப்பட்டது. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படமால் இருந்தது. கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி 16ம் தேதியில் இருந்து மொத்தம் 737 நாட்களாக சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். அதன்படி மொத்தமாக இதுவரை 300க்கும் மேற்பட்ட நபர்களிடம் நேரடி சாட்சியங்களும், 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும், 31 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப பரிசோதனைகளும், அறிவியல் பூர்வமான முறையிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அதே சமயம் இந்த வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டி இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் தமிழக அரசு கடந்த 24 ஆம் தேதி மூன்று பேருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. முரளிராஜா, சுதர்சன், முத்துகிருஷ்ணன் ஆகியோர் மூன்று பேர் மீது புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முட்டுக்காடு ஊராட்சித் தலைவர் பத்மா என்பவரின் கணவரை பழிவாங்கும் நோக்கில் குடிநீரில் மனிதக் கழிவு கலக்கப்பட்டதாக குற்றப்பத்திரிகையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதில் முரளிராஜா வேங்கை வயல் கிராமத்தைச் சேர்ந்தவர். ஆயுதப்படை காவலராக பணியாற்றி வந்துள்ளார். ஏற்கனவே இது தொடர்பாக அவரிடம் போலீசார் விசாரித்துள்ளனர். சிபிசிஐடி போலீசாரும் அவரை விசாரித்திருந்தனர். முரளி ராஜாவுக்கு குரல் மாதிரி பரிசோதனை, டிஎன்ஏ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. சுதர்சன், முத்துக்கிருஷ்ணன் ஆகிய இரண்டு இளைஞர்கள் அதே கிராமத்தைச் சேர்ந்தவர்கள். ‘
இந்நிலையில் வேங்கைவயல் சம்பவம் தொடர்பான வீடியோ, ஆடியோ உள்ளிட்ட ஆதாரங்களை சிபிசிஐடி போலீசார் வெளியிட்டுள்ளனர். அதில் இளைஞர்கள் பாலிதீன் கவரில் மனிதக் கழிவுகளை கொண்டு வந்து நீர்தேக்க தொட்டியில் சிரித்து பேசிக்கொண்டே அச்செயலில் மிகவும் சாதாரணமாக ஈடுபடும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விவாகரத்தில் தொடர்புடைய 3 பேருமே பட்டியல் இனத்தவர் என்றும் கூறுகிறார்கள். அதே வேளையில், திருமாவளவன் உள்ளிட்ட தலைவர் இந்த விவகாரத்தை திசை திருப்பும் விதமாக சி.பி.சி.ஐடி போலீசார் செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளனர். எனவே. இந்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Leave a Reply