ஆ.வெ.மாணிக்கவாசகம்
தமிழக அரசு சார்பில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்த பட்ஜெட்டில், “தமிழகத்தில் சிவகங்கை மாவட்டம் கீழடி, சேலம் மாவட்டம் தெலுங்கனூர் ,கோவை மாவட்டம் வெள்ளலூர், கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆதிச்சனூர், கடலூர் மாவட்டம் பனிக்கொள்ளை, தென்காசி மாவட்டம் கரிவலம் வந்த நல்லூர் தூத்துக்குடி மாவட்டம் பட்டணமருதூர்,
நாகப்பட்டினம் ஆகிய 8 இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள் நடைபெறும் ” என. அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகரை சுற்றியுள்ள தொன்மை வாய்ந்த ஊர்கள் பேரூர், வெள்ளலூர்.
இந்த 2 இடங்களிலும் ஏற்கனவே,
தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது மீண்டும் வெள்ளலூரில் அகழாய்வு செய்யப்படவுள்ளது,அப்பகுதி மக்கள் பெரிதும் வரவேற்று உள்ளனர்.
தமிழ் மா மண்ணில் சிறந்து விளங்கிய நொய்யல் வெளி நாகரிகம் வெளிப்பட்டது
” கொடுமணல் ” எனும் குறு கிராமம் .திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள கொடுமணல் அகழாய்வு உலகிற்கு அரிய பெரிய ஆவணங்களை அளித்தது. இப்போதும், அளித்துக் கொண்டுள்ளது .
அந்த கொடுமணலைப் போலவே நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்துள்ள வெள்ளலூர் பகுதியில் பல்வேறு கால கட்டங்களில் நடைபெற்ற அகழாய்வு முடிவுகள் ,
வெள்ளலூரில் பண்டைய பெருமைகள் பெரிதென போற்றுவது வியப்பிற்குரியது.
வெள்ளலூரில் அகழாய்வு மூலம் கிடைத்த நாணயங்கள்,கிமு முதல் நூற்றாண்டு முதல் கிபி 7-ம் நூற்றாண்டு வரை ரோம் நகரை ஆட்சி செய்த மன்னர்களால் வெளியிடப்பட்டவையாகும்.
1843-ம் ஆண்டில் வெள்ளலூரில் முதல் அகழ்வாராய்ச்சி செய்தபோது நூற்றுக்கணக்கான தங்க, வெள்ளி ,
வெண்கல நாணயங்கள் புதையல் புதையலாக கிடைத்ததாக,
“காலம் தோறும் வெள்ளலூர் ” என்ற நூலாசிரியர் வெ.கோ.பால தண்டபாணி பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார் .
தொடர்ந்து 1891, 1931 ,1939 ஆகிய ஆண்டுகளிலும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
1939-ம் ஆண்டு ஆராய்ச்சியில் நாணயங்களோடு சில தங்க அணிகலன்களும் கிடைத்துள்ளன.
கிடைக்கப்பெற்ற இந்த அரிய பொருட்களின் மூலம் உலகில் உள்ள பல்வேறு நாடுகளுடன் வெள்ளலூருக்கு வியாபாரத் தொடர்பு இருந்ததை தெரிய முடிகிறது .
கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு கல்வெட்டில்,
“வெளிலூர்த் தென்னூர் நக்கநார்க்கு வெளிலூர்
ஊரார் ” .என்ற தொடர் காணப்படுகிறது.
மேலும் கி.பி. 10-ம் நூற்றாண்டில் ,கோக்கண்டன் வீர நாராயணன் என்ற சேர மன்னன் வெள்ளலூர் பகுதியை ஆட்சி புரிந்தான் எனவும் குறிப்புகள் உள்ளன .
வெளிலூர், தென்னனூர் என குறிப்பிடும் கல்வெட்டில் , அடுத்து 11ஆம் நூற்றாண்டில் கண்டெடுக்கப்பட்ட இருகூர் செப்பேட்டில் வெள்ளலூர் என மருவி உள்ளது.
வெள்ளலூரில் புகழ்பெற்ற சிவாலயங்களில் ஒன்றான தேனீஸ்வரர் திருக்கோவில், விக்கிரம சோழனின் கல்வெட்டில் இடம் பெற்றுள்ளது.
இப்படி சிறப்பு வாய்ந்த வெள்ளலூரில் மீண்டும் அகழாய்வு செய்யப்படுவது குறித்து கவிஞர் டாக்டர் வெ.பே.மாரியப்பன் கூறுகையில்,
” மீண்டும் எங்கள் ஊரில் தொல்லியல் ஆய்வுகள் நடத்தப் போவதாக இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளதை பெருமை பொங்க எண்ணுகிறோம். வெள்ளலூர் ஒரு மிக முக்கியமான தொல்லியல் களம்.
தமிழகத்தில் கண்டெடுக்கப்பட்ட ரோமானிய நாணயங்களில் 80 சதவீதம் வெள்ளலூரில் கண்டெடுக்கப்பட்டது. முதுமக்கள் தாழி ,சதுரக்கல், அதன் ஊடே எலும்புக்கூடுகள், மண்பாண்டம் ,
குடுவைகள் உள்ளிட்ட பல வரலாற்றுச் சின்னங்கள் இங்கு கிடைத்துள்ளன. கொங்கு பெரு வழியான பாலக்காட்டு கணவாய் வழியாக வந்த. “யவனர்கள்” வெள்ளலூர் வழியாகவே வந்து செல்வது வழக்கமாக இருந்துள்ளது .
கோக்கண்டன் வீர நாராயணன்,கோக் கண்டன் ரவி கோதை என்ற இரு சேர மன்னர்கள் வெள்ளலூர் நாட்டை ஆண்டு உள்ளனர். வேளிர் இருப்பிடமாகவோ, தலைநகரமாகவோ இருந்த ஊர் இது.
இப்படி சரித்திரங்கள் பல கொண்ட வெள்ளலூரில் மீண்டும் அகழாய்வு செய்யப்படவுள்ளது, கொங்கு மண்டலத்தில் வரலாற்றுத் தொண்மையை மேலும் அறிந்து கொள்வதற்கான பெரும் வாய்ப்பு ஏற்படுவதோடு, மேலும் பல செப்பேடுகள், ரோமானிய நாணயங்கள், அணிகலன்கள், அக்கால மனிதன் பயன்படுத்திய பொருட்கள் உள்ளிட்டவைகளை காண ஆர்வமாக உள்ளோம் .மேலும் பெருமாள் கோவில் பகுதி, போர் நடந்ததாகக் கருதப்படும் நத்தமேடு,
உப்பிலியா திட்டு ஆகிய இடங்களில் அரிய பொருட்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதால் இப்பகுதிகளில் முதலில் அகழாய்வு செய்ய வேண்டும் ” என அரசுக்கு கோரிக்கை
Leave a Reply