,

வெங்காய பட்ஜெட் – விமர்சித்த அதிமுக கவுன்சிலர்கள்

பிரபாகரன்
Spread the love

கோயம்புத்தூர் மாநகராட்சியில் 2024-2025 ஆம் ஆண்டிற்கான வரவு – செலவு திட்ட அறிக்கை சமர்ப்பிக்கும் மாமன்ற சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து மாமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர். கோவை மேயர் கல்பனா ஆனந்தகுமார் வரவு – செலவு திட்ட அறிக்கையை வெளியிட்டார்.

வரவு – செலவு திட்ட அறிக்கை அறிவிக்கப்பட்ட பின்னர் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் ஷர்மிளா, ரமேஷ் மற்றும் பிரபாகரன் செய்தியாளர்களிடம் பேசிய போது, “இந்த பட்ஜெட்டில் புதிதாக எந்த திட்டமும் கொண்டு வரவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளாக என்ன கூறினார்களோ அதையேதான் தான் மீண்டும் இந்த பட்ஜெட்டில் கூறியிருக்கிறார்கள். புதிதாக மக்களுக்கான திட்டம் எதுவும் இந்த பட்ஜெட்டில் இடம் பெறவில்லை.

கோவை மாநகராட்சி வரி வசூல் செய்வதில் தனியார் நிறுவனங்களை விட கடுமையாக இருக்கின்றது.. மக்களை நெருக்கி வரி வசூல் செய்கின்றனர். இளைஞர்களை விளையாட்டுத்துறையில் ஊக்குவிக்கவோ, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க்க ஊக்குவிக்கும் திட்டமோ பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. வெள்ளலூர் குப்பை கிடங்கு பிரச்சனையை சரி செய்வதற்கான திட்டங்கள் எதுவும் இல்லை. தந்தை பெரியார் பாணியில் சொல்ல வேண்டும் என்றால் இந்த பட்ஜெட் ஒரு வெங்காய பட்ஜெட்” என்று விமர்சித்தனர். பின்னர் பட்ஜெட் மற்றும் அதன் மீதான விவாத கூட்டத்தை புறக்கணித்து வெளியே சென்றனர்.