​வால்பாறை அருகே 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்த ​பேருந்து – 40 பேர் காயம்

Spread the love

திருப்பூரிலிருந்து கோவை மாவட்டம் வால்பாறைக்கு செல்லும் அரசுப் பேருந்து ஒன்று​ ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கவிழ்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 40 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

அரசுப் பேருந்து அதிகாலை 12.30 மணி அளவில் திருப்பூரிலிருந்து புறப்பட்டு, வால்பாறை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. பேருந்தை இயக்கியவர் கணேஷ் (49) என்பவரும், நடத்துனர் சிவராஜும் உட்பட, பேருந்தில் மொத்தம் 72 பயணிகள் இருந்தனர்.

பேருந்து வால்பாறை அருகே கவர்கள் எஸ்டேட் பகுதியில் உள்ள 33-ஆவது கொண்டை ஊசி வளைவில், அதிகாலை 3 மணியளவில் சென்ற போது, வளைவை சரியாக முறைப்படுத்த முடியாமல், கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் பேருந்து சுமார் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

விபத்து தகவல் கிடைத்ததும் வால்பாறை காவல்துறையினர் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் வால்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

​இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் கணேஷ் உட்பட பலர் பலத்த காயமடைந்துள்ளனர். அவர்களைக் கூடுதல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு மாற்றியுள்ளனர். பயணிகளின் கை, கால், தலை பகுதிகளில் பல்வேறு காயங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில், வால்பாறை காவல்துறையினர் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 20 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.