வந்தே மாதரம் 150 ஆண்டு நிகழ்ச்சி: கோவையில் பாஜக சார்பில் பாடல் நிகழ்ச்சி

Spread the love

வந்தே மாதரம் பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கோவை வ.உ.சி மைதானத்தில் உள்ள வ.உ.சிதம்பரனார் சிலை முன்பு, கோவை மாநகர பாரதிய ஜனதா கட்சியினர் சார்பில் வந்தே மாதரம் பாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டார். அவர் முதலில் வ.உ.சிதம்பரனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் கட்சியினருடன் இணைந்து வந்தே மாதரம் பாடலைப் பாடினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இளம் தலைமுறைக்கு வந்தே மாதரம் பாடலின் வரலாறும் உணர்வும் சென்றடைய வேண்டும் என்பதற்காக பிரதமர் 150 ஆண்டு விழாவை நாடு முழுவதும் கொண்டாட வேண்டுகோள் விடுத்தார். விடுதலைப் போராட்டத்தில் தமிழகம் முன்னிலை வகித்திருந்தாலும், தமிழக அரசு இந்த நிகழ்ச்சியை முன்னெடுக்காதது வருத்தத்திற்குரியது” என்றார்.

மேலும், “கோயம்புத்தூர் மத்திய சிறை வளாகத்தில் உள்ள வ.உ.சிதம்பரனார் இழுத்த செக்கின் முன்பு பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி கேட்டோம். ஆனால் பாதுகாப்பு காரணத்தால் அனுமதி மறுக்கப்பட்டது. இருந்தாலும், கோவை முழுவதும் 100 இடங்களில் வந்தே மாதரம் பாடும் நிகழ்ச்சி நடைபெறும்,” என தெரிவித்தார்.

தேர்தல் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து பேசுகையில், “தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் முறைகேடு நடைபெறுகிறது. திமுக கட்சியினர் பூத் லெவல் அதிகாரிகளை மிரட்டுகிறார்கள். இதுகுறித்து புகார் அளிக்க உள்ளோம். தூய்மையான, நேர்மையான, வெளிப்படையான வாக்காளர் பட்டியல் உருவாக்க தேர்தல் ஆணையத்துடன் மக்கள் ஒத்துழைக்க வேண்டும்,” என வானதி சீனிவாசன் கூறினார்.தூய்மையான நேர்மையான வெளிப்படையான வாக்காளர் பட்டியலை உருவாக்கும் தேர்தல் ஆணையத்தின் பணிகளுக்கு மக்கள் அனைவரும் விழிப்புடன் இருந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும், ஆன்லைன் மூலமாகவும் இப்பணிகளை மேற்கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்தார்.