ராணிப்பேட்டை மாவட்டத்தில் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி வகுப்பறையில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை அடுத்த பெல்லியப்பா நகர் வள்ளலார் தெருவை சேர்ந்தவர் வசந்தகுமார். இவர் வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையில் தோல் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஈஷா அத்விதா (14) மற்றும் காவியா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் இளைய மகள் ஈஷா அத்விதா சுமைதாங்கி பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல சன்பீம் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் ஈஷா அத்விதா வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது பள்ளி வகுப்பறையில் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென, ஈஷா அத்விதா மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பள்ளி நிர்வாகம் உடனடியாக மயங்கி விழுந்த மாணவிக்கு முதலுதவி செய்த பிறகு, அவரை ஆம்புலன்ஸ் மூலமாக மீட்டு மேல்விஷாரம் பகுதியில் உள்ள அப்போலோ தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
Leave a Reply