நம் நாட்டில் அதிகமானோர், வந்து பார்வையிட்டுச் செல்லும் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக திகழ்கிறது, தென் எல்லையில் உள்ளது குமரி விவேகானந்தர் பாறை நினைவகம்.
வங்காள விரிகுடா, இந்தியப் பெருங்கடல், மற்றும் அரபி கடல் ஆகிய மூன்று கடல்களும் சங்கமிக்கும் பாறையின் மீது நிலப்பரப்பிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் பொலிவுற அமைந்திருக்கிறது விவேகானந்தர் பாறை.
உலகிற்கே ஆன்மீக சுரங்கமாக திகழும் நம் இந்திய நாட்டின் தலை சிறந்த துறவிகளில் முதன்மையாக விளங்கிய சுவாமி விவேகானந்தரின் நினைவு.
இனிமை, இன்பம் பொங்கும் கடல் காற்று,நர்த்தனம் புரியும் அலைகளுக்கு நடுவே ஒரு நேர்த்தி மிகு பாறை .
இப்பாறை புனிதமும் ஆனது, புதிரும் ஆனது .
இந்த தேசத்தின் ஆன்மீக ஒளியை உலகிற்கு பறை சாற்றிய தோய்ந்த துறவிக்கு இப்பாறை நித்தமும் ஒரு அஞ்சலியே….
1893-ம் ஆண்டு சிகாகோவில் நடைபெற்ற மாநாட்டில் “சகோதர.. சகோதரிகளே …!”
என உரையை தொடங்கி உலகை தம் பக்கம் திருப்பிய உன்னத துறவியின் நினைவாக 1970 – இல் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டது.
இந்தப் பாறையில் தான் சுவாமி விவேகானந்தர் “ஞானம்” பெற்றதாகவும் கூறப்படுகிறது.
பாறையில் ஒரு சிறப்பாக பாதுகாக்கப்பட்ட பகுதியே இந்த நினைவுச் சின்னம்.
இது இந்தியாவில் உள்ள பல்வேறு கட்டிடக்கலை பிரிவுகளின் கலவையாக கட்டப்பட்டு கம்பீரமான காட்சியாக அமைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ பாத மண்டபம் மற்றும் விவேகானந்தர் மண்டபம் என இரண்டு கட்டமைப்புகளை கொண்டு சிறந்து விளங்குகிறது .
இந்த ரம்யமான சூழல் அமையப் பெற்ற இவ்வளாகத்தில் சுவாமி விவேகானந்தர் வெண்கல சிலையில் அனைவருக்கும் காட்சி தருகிறார்.
இப்படி வரலாற்றுச் சிறப்புமிக்க விவேகானந்தர் மண்டபத்தில், 18-வது பொதுத் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி தியானம் மேற்கொண்டார்.
2019-ம் ஆண்டு பொது தேர்தலுக்கான பிரச்சார முடிவில் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் சன்னதிக்கு அருகில் உள்ள கோயில் 15 மணி நேரம் தியானம் மேற்கொண்டார்.
தியானம் இருப்பதற்கு முன்பாக வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் என அவர் ட்வீட் செய்து விட்டு தியானத்தைத் தொடர்ந்தார்.
கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி குஜராத்தில் நீரில் மூழ்க துவாரகா நகரத்தில் நீருக்கடியில் பிரதமர் மோடி பிரார்த்தனையில் ஈடுபட்டார்.
மேலும் ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்காக கேரளாவில் உள்ள குருவாயூர் கோயில், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி ஆலயம், திருவரங்கம் அரங்கநாதர் கோவில் ஆகியவற்றில் வழிபாடு செய்தார்.
இந்த ஆலயங்கள் அனைத்தும் ராமரோடு தொடர்புடையது என்பதால், ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக இந்த ஆலயங்களில் வழிபாடு செய்து
11 நாட்கள் ,
கடுமையான விரதம் மேற்கொண்டார்.
வேதங்களில் குறிப்பிட்டுள்ள கட்டுப்பாடு மற்றும் ஒழுக்க நெறிகளை வரையறுக்கும்
“யம நியம்” பின்பற்றுவதாக மோடி தெரிவித்தார்.
இந்நிலையில் கன்னியாகுமரி விவேகானந்தர் பாறைக்கு வந்த பிரதமர் மோடி முதல் நாள் இரவு தியானத்தில் ஈடுபட்டார்.
தொடர்ந்து இரண்டாம் நாள் காவி சட்டை,வேட்டி,
சால்வை அணிந்து தியானத்தில் ஈடுபட்டார். முன்னதாக அதிகாலை சூரிய நமஸ்கார வழிபாட்டிலும் ஈடுபட்டார்.
விவேகானந்தர் சிலை எதிரே அமர்ந்து தியானத்தில் ஈடுபட்ட மோடியின் கைகளில் ஜெபமாலை வைத்திருந்தார். தூபத்தின் பின்னணியில், “ஓம்” என்ற நாதம் ஒலிக்க தியானத்தில் ஈடுபட்டார்.
தொடர்ந்து மூன்றாம் நாள் சந்தியா வந்தனம் செய்து, விவேகானந்தர் மண்டபத்தை சுற்றி வந்து, தியானத்தில் ஈடுபட்டார்.
ஆன்மீக ரீதியிலானது பிரதமர் மோடியின் தியானம் என்றாலும் இது அரசியல் ரீதியாக என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் ஆர்வலர்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
இறுதிக்கட்ட தேர்தல் நடந்த வாரணாசி, மேற்குவங்கம் உள்ளிட்ட 57 தொகுதிகளில் மோடியின் தியானம் தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மேற்கு வங்கத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது.
இறுதிக் கட்டமாக மேற்கு வங்கத்தில் ஒன்பது தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது.
இதை முக்கியமாக கருத்தில் கொண்டே , பிரதமர் மோடி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் இருந்ததாக கூறப்படுகிறது.
வீரத்துறவி விவேகானந்தர் கொல்கத்தாவை சார்ந்தவர். இந்து மதத்திற்கு எழுச்சியை அளித்தவர். அந்த தாக்கத்தை ஏற்படுத்தவே, தேர்தலுக்காக பிரதமர் மோடி செய்த அரசியல் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
பிரதமர் மோடியின் இந்த செயல் தேர்தல் விதிமுறைகளை மீறிய செயல் என, தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்யப்பட்டதை, ஆணையம் அதை நிராகரித்தது.
மூன்று நாட்கள் குமரியில் மோடி தியானத்தில் ஈடுபட்டது ,தமிழக பாஜகவினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மோடியின் தியானத்தால், இறுதி கட்டமாக தேர்தல் நடைபெற்ற
57 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும் எனவும், பாஜகவின் இலக்கான 370 இடங்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியினர் களிப்பில் உள்ளனர்.
குமரியில் பிரதமர் மோடி தியானத்தில் ஈடுபட்டிருந்த நேரத்தில் முதலமைச்சர்
மு. க. ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், பாசிச பாஜகவின் உண்மை முகம் ஜூன் 4-ம் தேதி வெளிப்பட்டுவிடும் எனவும், தம்மை எதிர்க்க யாரும் இல்லை என்ற மமதையில் பாஜக இருந்ததாகவும்,
இந்தியா கூட்டணியின் பிரச்சாரத்தால், அக்கூட்டணி வெற்றியின் முகட்டில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
Leave a Reply