,

மின் கட்டண உயர்வு – தொழிற்துறையினர் மனித சங்கிலி போராட்டம்

electricity charges hike
Spread the love

கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள COWMA அலுவலகத்தில் தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.  அப்போது பேசிய அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ், மற்றும் அமைப்பை சேர்ந்த ஜெயபால் பேசுகையில்,சிறு குறு தொழில் நிறுவனங்களின் மூலப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் மின்சார கட்டணம் உயர்வினால் தொழில் பாதிப்பு ஏற்பட்டதால் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக கூறினர்.

30 வகையான மின் கட்டண உயர்வு ஏற்படுத்தியுள்ளனர் எனவும் அதில் நாங்கள் முன் வைப்பது 5 வகையான கட்டண குறைவுக்கான கோரிக்கை தான் எனவும் தெரிவித்தனர். இது குறித்து முதல்வரிடம் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வருகிறோம் என கூறிய அவர்கள் சிறுகுறு தொழில்களை பாதுக்காக்க கோரிக்கை விடுத்து வருவதாக தெரிவித்தனர். 430% நிலைக்கட்டணத்திற்கு கட்டணம் உயர்த்தி உள்ளனர். மாதாந்திர கட்டணம் உயர்த்தி உள்ளனர். இதனால் கட்டணம் செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறோம்.

நகை நட்டல்லாம் வைத்து மின் கட்டணம் செலுத்தும் அளவிற்கு தொழில் துறையினர் தள்ளப்பட்டுள்ளனர் என்றனர். 118 நாட்கள் தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளோம் என தெரிவித்த அவர்கள் தந்தி அனுப்புவது, கடை அடைப்பு, சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு, மாவட்ட ஆட்சியர் சந்திப்பு என தொடர்ச்சியாக போராட்டத்தை நடத்தி வருகிறோம் என்றனர். மேலும் தொழில் நிறுவனங்களின் மேற்கூரைகளில் சோலர் போர்டு அமைப்பதற்கு 1.53 காசு என மின் வாரியம் எங்களிடம் வசூல் செய்து வருகின்றனர் எனவும் ஆனால் பிற மாநிலங்களில் 50% அரசு ஏற்றுக் கொள்கிறது என தெரிவித்தனர்.

இந்நிலையில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை தமிழ்நாடு முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடத்தவுள்ளதாகவும் அரசியல் கட்சிகள் எங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். அரசு பிரச்சனைக்கு தீர்வு கொடுக்க வேண்டும் என்கிறோம். மேலும் தொழில் பாதுகாப்பு மற்றும் நலிந்த தொழிலை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.